கடலில் மூழ்கி நூறு ஆண்டு நிறைவு: டைட்டானிக் கப்பலின் 5000 பொருட்கள் ஏலம்
நியூயார்க்: உலகின் பிரம்மாண்டமான சொகுசுக்கப்பலான டைட்டானிக் கப்பலில் இருந்த அரிய பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. அட்லாண்டிக் கடலில் மூழ்கியதன் நூறு ஆண்டு நிறைவு அனுஷ்டிக்கும் விதமாக இந்த ஏலம் நடைபெற உள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தம்ப்டான் பகுதியில் இருந்து கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் நோக்கி தனது பயணத்தை துவக்கியது. உலகிலேயே அப்போது மிகப்பெரிய சொகுசு கப்பல் இதுதான்.
முதல் பயணமே முடிவு
இந்த கப்பலில் மொத்தம் 2,223 பேர் பயணம் செய்தனர். அந்த காலத்தில் நவீன தொழில் நுட்பத்தில் ஒயிட் ஸ்டார் லைன் என்ற கம்பெனி இதை உருவாக்கியது. கப்பலில் பாதுகாப்பு அதிகமாக உள்ளது. எனவே, லைப் போட் தேவையில்லை என்று கப்பல் நிறுவனம் கூறியது.
பல சர்ச்சைகளுக்கு இடையில் 1178 பேருக்கு மட்டுமே லைப்போட் இணைக்கப்பட்டு கப்பல் தனது முதல் பயணத்தை 1912 ஏப்ரல் 10ம் தேதி தொடங்கியது. அடுத்த 2வது நாளே பனி கட்டியில் மோதி கடலில் மூழ்கியது.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இக்கப்பல் தனது முதல் பயணத்தின் போதே வடக்கு அட்லான்டிக் கடலில் மிகப்பெரிய பனி கட்டியில் மோதி மூழ்கியது என்பதுதான் பெரும் சோகம். அந்த விபத்தில் 1517 பேர் பலியாகினர். உலக வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக இன்றைக்கும் அது பேசப்படுகிறது.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பல தனியார் நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அதில் இருந்து பல அரிய பொருட்களை மீட்டு வந்தன. இந்நிலையில், கப்பலில் கிடைத்த மிகச்சிறிய ஹேர்பின் முதல் கப்பலின் உடைந்த இரும்பு பாகங்கள் வரை 5,000 அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை வரும் ஏப்ரலில் ஏலம் விட அமெரிக்காவின் நியூயார்க் குர்ன்சே ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கலைநயம்மிக்க பொருட்கள்
கப்பலில் பொருத்தி இருந்த கலைநயமிக்க பாகங்கள், தகரங்கள், பயணிகளின் பர்ஸ், கூலிங் கிளாஸ்கள் உள்பட பல பொருட்கள் ஏலத்துக்கு தயாராக உள்ளன. எனினும், டைட்டானிக் பொருட்களை தனியாருக்கு விற்க கூடாது. பொருட்களை ஏலம் எடுப்பவர்கள், அவற்றை நன்கு பராமரிக்கவும், அவ்வப்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கவும் ஒப்புக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்பவர்களுக்கே டைட்டானிக் பொருட்களை விற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூயார்க் குர்ன்சே ஏல நிறுவனம் ஏற்கனவே டயானாவின் நகைகள், அமெரிக்க அதிபர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட போது பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் போன்ற பல அரிய பொருட்களை ஏலம் விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications