ஜித்தாவில் 'ஈத் மிலன்': தமிழக ஹஜ் யாத்ரீகர்கள் கவுரவிப்பு
ஜித்தா: இந்த வருடம் புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றிய தமிழக யாத்ரீகர்களை கவுரவப்படுத்தும் நிகழச்சியான ஈத் மிலன் ஜித்தாவில் நடைபெற்றது.
புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றிய தமிழக யாத்ரீகர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஈத் மிலன் என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஜித்தாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி ஜித்தா, ஷரபியாவிலுள்ள லக்கி தர்பார் ரெஸ்டாரண்டில் நேற்று நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து வந்திருந்த ஏராளமான ஹஜ் யாத்ரீகர்களும், ஜித்தா வாழ் தமிழ் மக்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக 'ராபியா டீ' அப்துல் அஜீஸ் துவக்கி வைக்க, நிகழ்ச்சி கிராத்துடன் துவங்கப்பட்டது. வந்திருந்தவர்களை வரவேற்று 'உஜாலா' ராபியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தேரழந்தூர் ஹாஜா மைதீன், ஹஜ்ஜின் பயன்களைப் பற்றி கூறியதோடு, ஹஜ்ஜுக்குப் பின் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல செயல்களை பட்டியலிட்டார். தொடர்ந்து ஹஜ் யாத்ரீகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்பொழுது ஹஜ் செய்யும்போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஹாஜிகள் பகிர்ந்து கொண்டனர். இதுபோல் நடக்கும் சந்திப்பில், பல வருடங்களாக சந்தித்திராத நண்பர்களை சந்தித்ததாக பெருமிதம் கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி மார்க்க சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருக்கையில் வயது முதிர்ந்த ஹாஜி ஒருவர் தனது உறவினர்களை பிரிந்து தனியே தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை ஈத் மிலனுக்கு அழைத்து வந்து வினவியதில், தனது பெயர் முஹம்மது சுல்தான் என்றும், ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு என்றும், இந்திய ஹஜ் கமிட்டியில் வந்த தான் மக்காவிலிருந்து ஜித்தாவிற்கு டாக்ஸியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்ததாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து வந்திருந்த மற்ற ஹாஜிகள் அவரை பத்திரமாக மீண்டும் மக்காவிற்கு அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டனர். அதே போல் அஹ்மது ரசாத், லப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்தவர்களை உடனே ஈத் மிலனுக்கு அழைத்து வந்து முஹம்மது சுல்தான் ஜித்தாவில் இருப்பதை மக்காவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 'உஜாலா' ராபியா, 'ராபியா டீ' அப்துல் அஜீஸ் மற்றும் நூருல் அமீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் 'ராபியா டீ' அப்துல் அஜீஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications