துபாயில் நடந்த வி.களத்தூர் சங்கமம் 2012
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் மக்கள் சந்தித்துக் கொண்ட “வி.களத்தூர் சங்கமம் 2012” என்னும் நிகழ்ச்சி துபாய் முஸ்ரிப் பூங்காவில் கடந்த 24ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்புக் குழுவினர் வரவேற்றனர். சவுதி அரேபியாவில் இருந்து சுலைமான், துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குற்றாலம் லியாக்கத் அலி, இணைப் பொதுச் செயலாளர் முஹம்மது தாஹா, ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் மொய்தீன் அப்துல் காதர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான 'கபடி' முக்கிய இடம் பிடித்தது. இந்நிகழ்வு பூங்காவில் குழுமியிருந்த அரபு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இதுதவிர ’பின்னோக்கி ஓடுதல், கலர் பந்து பொறுக்குதல் உள்ளிட்ட செயலுக்கும் மூளைக்கும் வேலைகொடுக்கும் போட்டியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வி.களத்தூர் மட்டுமல்லாது அக்கம் பக்க ஊர்வாசிகளும் கலந்து கொண்டனர்.