வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் கோலாகலம்
திருச்செந்தூர்: முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர தினமாக போற்றப்படும் வைகாசி விசாகத் திருநாள் இன்று பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்தது விசாகம். இதனால் முருகப் பெருமானும் ஆறு முகங்களோடு திகழ்கிறார் என்பது ஐதீகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று. இதன் காரணமாகவே வைகாசி விசாகம் முருக பக்தர்களிடையே மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் குவிவது வழக்கம். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால் குடம் எடுத்தும் பாதயாத்திரையாக வந்த பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக பல்லாயிரக்கணக்கில் திரண்டுள்ளனர்.
விசாகத் திருநாளை ஒட்டி திருச்செந்தூரில் அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீப ஆராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. விழாவையொட்டி சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பாதயாத்திரையாக பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று மாலை கோயில் வசந்த மண்டபத்தில் முருகப் பெருமான் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சைவர்களைப் போல வைகாசி விசாகம் வைணவர்களுக்கும் முக்கிய நாளாகும். வைகாசி விசாகத்தில் தான் பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமானவராகக் கொண்டாடப்படும் நம்மாழ்வார் அவதரித்தார். எனவே நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரி, சுற்றிலுமுள்ள வைணவ திருத்தலங்களான நாங்குநேரி, திருக்குறுங்குடி, நவதிருப்பதி உள்ளிட்ட அனைத்து வைணவத் தலங்களிலும் இன்று நம்மாழ்வாரின் திருநட்சத்திரம் கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications