துபாய், அபுதாபியில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
துபாய் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இந்திய பாரம்பரியத்தை விளக்கும் வண்ணமும், தேசிய பக்தியினை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது.
சஞ்சய் வர்மா தனது உரையில் அமீரகம், இந்தியாவுக்கான இரு தரப்பு உறவு குறித்து பெருமிதம் தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணமாக இருந்து வரும் அமீரக வாழ் இந்தியர்களைப் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தினச் செய்தியினை வாசித்தார்.
அபுதாபி
அமீரகத் தலைநகர் அபுதாபியில் இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.
பல்வேறு இந்தியப் பள்ளி மாணாக்கர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதேபோல் ஷார்ஜா, உம்முல் குவைன், அஜ்மான், ராசல் கைமா, கல்பா, அல் அய்ன், ஃபுஜைரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்திய சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஏமன்:
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் இந்தியாவின் 67வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்திய தேசியக் கொடியினை இந்திய தூதரகத்தின் சார்ஜ் டி அஃபையர்ஸ் ஆர். வெங்கடேஷன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரை வாசிக்கப்பட்டது.
இந்திய தூதரகப் பள்ளி மாணாக்கர்கள் தேச பக்திப் பாடல்களைப் பாடினர்.
நிகழ்வில் ஏமன் நாட்டில் வாழ்ந்து வரும் இந்திய குடிமக்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.