நீ ஒரு காதல் சங்கீதம்!
காதலை ஏன் சங்கீதம் என்று கூறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சங்கீதத்தைப் போல காதலும் சுகமானது, மனசுக்கு இதமானது, தெம்பூட்டக்கூடியது, உற்சாகம் தரக் கூடியது, ஊக்கம் தரக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.
மேலும், சங்கீதத்தைப் போலவே காதலும் நம்மை மெய் மறக்க வைக்கும் ஒரு மாயாஜாலமாகும். இந்த மாயா சக்திக்குள் வீழாத, வீழ்ந்து மீண்டவர்கள் என்று யாருமே கிடையாது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு கட்டத்தில் இதில் விழுந்து எழுந்தவர்கள்தான்.
காதலே ஒரு அருமையான ராகம்தான். அதை மீட்டும்போது, மீட்டுகின்ற விதத்தில் அதன் அருமை புரியும், அழகும் மிளிரும்...
ஒவ்வொரு காதலும் ஆனந்த பைரவி போல, அமிர்தவர்ஷினி போல, மோகன ராகம் போல தென்றல் கலந்த தெய்வீக சுகானுபவம்தான்.
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ, காவியமோ கண் நிறைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் வந்து பொங்குதம்மமா... மோகனம் தரும் இந்தப் பாடல் காதலை எப்படி ரசிக்க வைக்கிறது பாருங்கள்.
அதேபோல ..
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
நினைவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை... இப்படிப் பாடினால் சொக்காத உள்ளம் உண்டா..திறக்காத மனக் கதவுதான் உண்டா.
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே... காதலன் 'குணா'வாக இருந்தாலும் அந்தக் காதலில் எத்தனை குணம் தெரிகிறது பாருங்கள். சங்கராபரணமே சொக்கிப் போகுமே இந்த வரிகளையும், அதன் வாளிப்பையும் கேட்டால். நிச்சயம் மனிதர்கள் உணர்ந்து கொள்ள முடியாத, வார்த்தைகளில் விளக்க முடியாத கவிதைதான் இந்தக் காதல்...
இன்னும் உன்னை சந்திக்கவில்லை
எங்கிருந்தாலும் என் ஆத்மா உன்னுடன்தான்
என்ன அழகு நீ...
எங்கிருந்தாய் இத்தனை காலம்
மீண்டும் மீண்டும் காதலிப்பேன்
காலத்திற்குப் பின்னும் காதலிப்பேன்
எங்கோ என் ஆன்மா போவதற்குப் பதில்
உன்னைச் சுற்றியே திரியச் சொல்வேன்
நடக்க முடியாத கால்கள்
பேச முடியாத வாய்
மெளனமே பாஷையாகிப் போன நான்
எங்கெங்கும் உன் முகம்
என்னவளே
உலகமே அழகாக இருக்கிறது
உன் முகம் மூலம் நான் பார்க்கும்போது
உன்னால்தான் இது சாத்தியம்
எடுத்துக்கொள் என்னை
கொண்டு போய் விடு என்னை
சந்தேகமே இல்லை, நிச்சயம் காதல் ஒரு சங்கீதம்தான்...!