தென்றல் வந்து தீண்டும்போது...!

ஒவ்வொரு காதலும் சந்தோஷமானதுதானே... அந்தக் காதல் உடம்புக்குள் ஏற்படுத்தும் சந்தோஷத்தை விட உள்ளத்தில் விதைக்கும் உற்சாகமே அதிகம். உடம்பை விட உள்ளம்தான் அப்போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும்... இந்த மகிழ்ச்சித் துள்ளாட்டத்திற்கு ஈடு இணையே கிடையாது.. அனுபவித்துப் பார்த்த ஒவ்வொருவருக்கும் இது தெரியும்.
நீ முதல் முறை பேசியபோது
என் காதுகளில் சங்கீதம் கேட்டது
- உன் குரல் கேட்கவில்லை
முதல் முறை நாம் பார்த்தபோது
என் கண் முன்பு தேவதைதான் தெரிந்தாள்
- நீ தெரியவில்லை
பேசுவதும், பார்ப்பதும் சங்கீதமாகவும், தேவதையாகவும் தெரிவது காதலில் மட்டுமே சாத்தியம். அந்த தென்றல் கலந்த உணர்வுக்கு கிட்டத்தட்ட அடிமையாகி விடுகிறார்கள் ஒவ்வொரு காதலர்களும். அந்த உணர்விலேயே மூழ்கிக் கிடக்கவும் விரும்புகிறார்கள். காரணம், அது தரும் தெம்புதான்.. பலரை காதல், முடக்கிப் போட்டு விடும். ஆனால் பலருக்கு காதல் பெரும் பலமாகிப் போகிறது.
உன் கரங்கள் என்னைத் தழுவத் தேவையில்லை
என் தலைமேல் பரிவோடு இருக்கட்டும்
தாயினும் சாலப் பரிந்து என்று சொல்வார்கள் இல்லையா... அது போலத்தான் இதுவும். ஒரு அன்னை தரும் அன்பை, அவருக்கு அடுத்து காதலியம், மனைவியும்தான் வழங்குவார்கள் என்பார்கள். அப்படிப்பட்ட அன்புக்கு அடிமையாகாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா.. அதுபோலத்தான் அன்புக்குரியவரின் அன்பு எப்போதும் எனக்கு இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காதலனும், ஒவ்வொரு காதலியும் ஏங்குகிறார்கள்.
நான் ஒரு பந்து போல
நீ என்னை எப்படி அடித்தாலும்
நான் திரும்பத் திரும்ப உன்னிடமே வருவேன்
உன் அன்பைத் தேடியே ஓடி வருவேன்
ஒவ்வொரு காதலனையும் குழந்தை போல என்று சொல்வார்கள். காரணம், காதலியின் அனபுக்காக அவன் காத்துக் கிடக்கிறான், கிடைக்காத போது அடம் பிடிக்கிறான், சுணங்கிப் போகிறான், அழுது சாதிக்கிறான். காரணம், காதல் தரும் சந்தோஷம் அப்படி..
சூரியன் கிழக்கில் உதித்தபோது
என் காதல் மனதில் பிறந்தது
ஆனால் சூரியன் மேற்கே மறைந்தபோது
என் காதல் மறையவில்லை
மாறாக மேலும் பெரிதாக உயர்ந்தது
உள்ளுக்குள் உன்னுடன் நான் பாடிய தோடி..
கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷமடி தோழி...
வாழ்நாளின் கடைசி எச்சத்தில் தொக்கி நிற்கும் அந்த கடைசி நொடியிலும்
உன் கண்களை பார்த்தபடி என் கண் மூடிப் போகும் கண்ணே...
காலம் முடியும் வரை உன் காதலுடன்....!
காதல் அழகானது, அருமையானது. ஒவ்வொரு உயிரையும் உயிர்ப்போடு வைக்க உதவுவது. ஒவ்வொருவருக்கும் ஒரு காதல் வரும். சக்தி வாய்ந்த மனங்களுக்கிடையே ஏற்படும் காதல் அழகானது மட்டுமல்ல, நிச்சயம் ஆழமானதும் கூட... மனதார ஆராதியுங்கள் அந்தக் காதலை.












Click it and Unblock the Notifications