ஹூஸ்டன்... தமிழ்ப் பள்ளிகளுக்காக 40 ஆயிரம் டாலர்கள் நிதியளிப்பு விழா!
ஹூஸ்டன்(யு.எஸ்): அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் ஒன்றான ஹூஸ்டனில் செயல்பட்டு வரும் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக 40 ஆயிரம் டாலர்கள் நன்கொடை வழங்கப்பட்டது.
ஹூஸ்டன் மாநகர பாரதி கலை மன்றத்தின் அங்கமாக 17 ஆண்டுகளாக அங்கே தமிழ்ப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கு ஹூஸ்டன், பியர்லேண்ட், சுகர்லேண்ட், கேட்டி, சைப்ரஸ் பகுதிகளில் 5 கிளைகளாக இயங்குகின்றன . பாலர், மழலை மற்றும் 1ம் நிலை முதல் 8ம் நிலை வரை மொத்தம் 300 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

அமெரிக்கக் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் இந்த தமிழ்ப் பள்ளிகளுக்கு டெக்சாஸ் அரசு அங்கீகாரம், உயர்தரப் தமிழ்ப் போட்டிகள், நூலகம், புதிய தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
அதற்கான நிதித் தேவைகளுக்காக, நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெஸ்ட் செஸ்டர் அகடமி அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்குழந்தைகளில் கலை நிகழ்ச்சிகளும், விஜய் டிவி புகழ் அமுதவாணன் பங்கேற்ற நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
வண்ணமயமான உடையலங்காரத்துடன் குழந்தைகள் நடனம் , நாடகம் என பார்த்தவர்களின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டனர். அமுதவாணன் நடனம் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கினார். அவருடன் உள்ளூர்காரர்களும் பங்கேற்றனர்.
700 இருக்கைகள் கொண்ட அரங்கம் பார்வையாளர்களால நிரம்பி வழிந்தது. நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் படவில்லை. ஆனாலும் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

டிக்கெட்டுக்கு பணம் வாங்காமல் 40 ஆயிரம் டாலர்கள் நன்கொடை மூலமாகவே திரட்டியிருந்தார்கள். 40 ஆயிரம் டாலர்களுக்கான காசோலையை அமுதவாணன், மாலா கோபால் மற்றும் கங்கா வழங்க, தமிழ்ப் பள்ளிகளின் சார்பாக பாரதி கலை மன்ற தலைவர் திருவேங்கடம் பெற்றுக் கொண்டார்.

அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளி வளர்ச்சிக்காக இவ்வளவு பெரிய தொகை நன்கொடையாக வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை எனத் தெரிகிறது.
-இர தினகர்












Click it and Unblock the Notifications