துபாய் தமிழ்ச் சங்கத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தில் காந்தி ஜெயந்தி விழா 25.10.2013 அன்று மாலை ஷார்ஜா ரயன் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் வெகு சிறப்புற நடைபெற்றது.
காந்தி ஜெயந்தி விழாவிற்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். அமீரக தேசிய கீதம், இந்திய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்டவற்றுடன் விழா இனிதே துவங்கியது. சந்திராவின் மாணாக்கர்கள் திருக்குறளை அதன் விளக்கத்துடன் கூற செல்வி கோபிகா இன்று ஒரு தகவலைக் கூறினார்.

பொதுச் செயலாளர் ஜெகநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய துணைத் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் கன்சல் ராமகிருஷ்ணன் பணிமாறுதல் பெற்று செல்வதையடுத்து அவர் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவர் தனது உரையில், அமீரகத் தமிழ் மக்களுக்காக துபாய் தமிழ்ச் சங்கம் ஆற்றி வரும் பணிகளைப் பாராட்டினார்.
தாயகத்திலிருந்து வருகை புரிந்த சிறப்பு விருந்தினர் முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர் அவர்களின் தமிழ்ப் பணியினை பாராட்டி பொன்னாடை, மலர்க்கொத்து மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அவர் தனது உரையில், அமீரகத் தமிழ் மக்களை ஒருசேர சந்திக்கும் வாய்ப்பினை தந்த துபாய் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் முழுமையாக தெரியாவிட்டாலும் அதற்காக முயற்சியெடுத்து மேடையில் தமிழ் மொழியில் வழங்கும் நிகழ்வுகள் மெய்சிலிர்க்க வைத்து விட்டது. தமிழகத்தின் நடன நிகழ்வுகளை ஒரு துளி இடைவெளியும் இன்றி தொடர்ந்து நடத்தி வரும் பாங்கு பாராட்டுக்குரியது. இதற்காக உழைத்திட்ட பாட்டு ஆசிரியை சந்திரா கீதாகிருஷ்ணன், நடன ஆசிரியை கவிதா பிரசன்னா உள்ளிட்ட குழுவினரைப் பாராட்டினார். அமீரகத்தில் இருப்பது போன்ற நிகழ்வினை விட தமிழகத்தில் இருப்பது போன்ற மனநிறைவினை துபாய் தமிழ்ச் சங்கம் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

சாரே ஜஹான்ஸே அச்சா, தமிழுக்கும் அமுதென்று பேர், பாருக்குள்ளே நல்ல நாடு, சாந்தி நிலவ வேண்டும், மகான் காந்தி மகான் உள்ளிட்ட பாடல்களை மாணவக் குழுவினர் பாடினர். வினாடி வினா நிகழ்வினை விஜயேந்திரனும், தெரிந்த மொழி தெரியாத வார்த்தைகள் நிகழ்வினை சந்திராவும் நடத்தினர்.
காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, பாரதியார், அன்னை தெரசா, ஜெயலலிதா, தமிழன்னை உள்ளிட்ட வேடங்களில் மாணவர்கள் தோன்றி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் தனது ஊடகப் பணிகளுக்காக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். பொருளாளர் கீதா கிருஷ்ணன் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications