துபாயில் நடைபெற்ற 'நாம் எங்கே போகிறோம்?': சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய்: துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் சார்பில் நான் எங்கே போகிறோம்? எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி மாலை அஸ்கான் சமுதாயக் கூடத்தில் வெகு சிறப்புற நடைபெற்றது.
துவக்கமாக திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதி சிறப்புச் சொற்பொழிவாளர் பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் குறித்த அறிமுகவுரையினை வழங்கினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் துவக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், சுன்னத் வல் ஜமாஅத் கடந்த ஆறு ஆண்டுகளாக வாரந்தோறும் புதன்கிழமை மாலை மிகவும் பயனுள்ள சொற்பொழிவு நிகழ்ச்சிகளை தலைசிறந்த அறிஞர்களைக் கொண்டு நடத்தி வருவதாக குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நல்லுள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் நாம் எங்கே போகிறோம்? எனும் தலைப்பில் சிந்தனையை ஏற்படுத்தக்கூடிய வகையில் சிறப்பு சொற்பொழிவினை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், இன்றைய குடும்ப உறவுகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் நிலை, படிக்காத தந்தை தனது மகனை கஷ்டப்பட்டு உயர்கல்வி படிக்க வைக்கும் போது ஏற்படும் நிலை, குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அனுபவப்பூர்வ நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளர் திருச்சி சையது இது போன்ற அனுபவ உரைகள் அமீரகத்தில் பணிபுரிந்து வரும் பெற்றோர்கள் தங்களது வாழ்வில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்பதனை குறிப்பிட்டார்.

முனைவர் பீ.மு.மன்சூரிடம் கல்வி பயின்ற பல மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேராசிரியரிடம் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஹம்மது மஃரூப், முஹம்மது கஃபூர், ஜமால் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications