கருத்துப் பரிமாற்றங்களுடன்.. இனிதே நடந்தேறிய ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி கருத்தரங்கம்
கருத்துப் பரிமாற்றங்களுடன்.. இனிதே நடந்தேறிய ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி கருத்தரங்கம்
ஹூஸ்டன்: ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளியின் சார்பில் சென்ற சனிக்கிழமை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை சுகர்லேண்ட் பள்ளிக் கிளையில் ஆசிரியர் மற்றும் பள்ளிப் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முற்பகல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. தொடர்ந்து தலைவர் கரு.மாணிக்கவாசகம் வரவேற்புரை வழங்க, செயலாளர் சங்கீதா நீலகண்டன் நிகழ்ச்சி நிரலுடன் பள்ளி குறித்த விளக்கப்படத்தினை விவரித்தார். அடுத்ததாக பள்ளி ஆசிரியர் குழு தலைமை ஆலோசகர் வசந்தி இராமன் "வகுப்பறையும் ஆசிரியரும்" மற்றும் "இலக்கு நோக்கிய தமிழ்" ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கப் பயிற்சியினை ஆசிரியர்களுக்கு வழங்கினார்.
தன்னார்வலர்களால் நடத்தப்படும் பள்ளி ஆயினும் வகுப்பறையின் வரையறைகள் எவ்வாறிருக்கவேண்டும் என்றும், குறைந்த கால அளவிலே வார இறுதியில் மட்டுமே கற்றுத்தரப்படும் தமிழ், இலக்கு நோக்கியதாக அமைய வேண்டும் என்றும் பல எடுத்துக்காட்டுகளுடன் விவரித்தது ஆசிரியப் பெருமக்களுக்கு பேருதவியாக இருந்தது.

கரு. மலர்ச்செல்வன் உரை
அதனைத் தொடர்ந்து, பள்ளி நிறுவனர் கரு.மலர்ச்செல்வன் "டெக்சஸ் பள்ளிக்கல்வியில் தமிழ்" எனும் தலைப்பில் கல்வி மாவட்டங்களில் இரண்டாம் மொழிப்பாட தேவைகளை பல சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.

அறுசுவை உணவுடன் கருத்துப் பரிமாற்றம்
அதன்பின்னர், ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளியின் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால்கிருஷ்ணன், வகுப்பு நிலை மற்றும் பாடத்திட்டம் குறித்த விளக்கவுரை நிகழ்த்தியவுடன், கருத்தரங்கில் கலந்துகொண்டோர் குழு நிழற்படம் எடுக்க, முற்பகல் விழா நிறைவுற்று, அனைவருக்கும் தன்னார்வலர் தயாரிப்பான அறுசுவை உணவு வழஙகப்பட்டது. உணவு உண்ணுகையிலேயே ஆறு கிளைப் பள்ளிகளின் நிலை சார்ந்த ஆசிரியர்கள் அனைவரும் குழுவாக அமர்ந்து கலந்தாய்வு செய்து தத்தமது அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டது சிறப்பு நிகழ்வாக அமைந்திருந்தது எனலாம்.

பள்ளிகளின் நிர்வாகக் குழு
பிற்பகல் உணவுக்குப் பின்னர், பள்ளியின் நிர்வாகக்குழுத் தேர்வுக்கூட்டம் நடைபெற்று 2017-18 கல்வியாண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைவரும் பொறுப்பேற்றுக்கொண்டனர். அதனையடுத்து, ஆறு பள்ளிக்கிளைகளது பெற்றோர்-ஆசிரியர்-கழக- நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது.

பள்ளி நிர்வாகக் கட்டமைப்பு குறித்து
அதனில், பள்ளி நிர்வாகக் கட்டமைப்பு குறித்த விளக்கப் பயிற்சியும், பள்ளி எவ்வகையில் சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதும் இடம் பெற்றிருந்தன. அதனை பள்ளியின் புதிய தலைவர் ஜெகன் அண்னாமலை மற்றும் முன்னாள் துணைத் தலைவர் வெங்கட் பொன்னுசாமியும் திறம்படத் தொகுத்து வழங்கினர்.

தானியங்கி வருகைப் பதி்வேடு
தொடர்ந்து வந்தது, கிளைப்பள்ளி முதல்வர்களது பள்ளி அறிக்கை. அவற்றில், ஒவ்வொரு கிளைகளது சிறம்பம்சங்கங்கள் எடுத்துரைக்கப்பட்டன. குறிப்பாக, தன்னார்வலர் பள்ளி ஆயினும், மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையின் வாயிலாகவே தானியங்கி வருகைப் பதிவேடு முறை தகவல் தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தப்படுவது பெரிதும் வரவேற்கப்பட்டதாக அமைந்திருந்தது.

ஊக்கம் தந்த நிகழ்வு
கருத்தரங்கின் இறுதிநிகழ்வாக, பொருளாளர் தாமோதரன் நாராயனன் நன்றி கூற, கருத்தரங்கில் கலந்துகொண்டோர் குழு நிழற்படம் எடுக்க, விழா இனிதே நிறைவடைந்தது. பள்ளியின் சார்பில் ஆண்டுக்கொருமுறை நடைபெறும் இக்கருத்தரங்கம், ஆசிரியர்-பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு புத்துணர்வை வழங்கி கல்வியாண்டுப் பயணம் இனிதே தொடங்க ஊக்கம் தரக்கூடிய நிகழ்வாக அமைகிறது என்றால் அது மிகையன்று.
செய்தி-படங்கள்: கரு.மாணிக்கவாசகம்












Click it and Unblock the Notifications