ராசல்கைமா தமிழ் மன்றத்தில் செம்மொழி இதழ் வெளியீட்டு நிகழ்ச்சி
துபாய்: துபாயில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ராசல்கைமா. அமீரகத்தில் செயல்பட்டு வரும் ராசல்கைமா தமிழ் மன்றத்தில் செம்மொழி இதழ் வெளியீடு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி 06.12.2013 அன்று மாலை தாஜ்மஹால் உணவகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராசல்கைமா தமிழ் மன்ற தலைவர் அஜ்மல் கான் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் ராசல்கைமா தமிழ் மன்றம் தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் ஆற்றி வரும் பணிகள் குறித்து விவரித்தார்.
பொதுச் செயலாளர் பூபதி வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர் ஹபிபுல்லா துவக்கவுரை நிகழ்த்தினார்.

சிங்கப்பூர் தமிழ்வேள் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளிவந்து கொண்டிருக்கும் செம்மொழி சமூக இலக்கிய இதழை முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர் வெளியிட ராசல்கைமா தமிழ் மன்ற நிர்வாகிகள் அஜ்மல் கான், பூபதி, ஹபிபுல்லா, ஸ்ரீதர், மாசானராஜ் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய முனைவர் பீ.மு. மன்சூர் கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழ் மொழியின் காரணமாக நாம் ஒருங்கிணைந்துள்ளோம். தமிழ் மொழியினை கற்றுக் கொள்வதுடன் அந்நிய மொழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை அமீரக சுற்றுப் பயணத்தின் மூலம் அறிந்து கொண்டதாகக் குறிப்பிட்டார்.

ராசல்கைமா தமிழ் மன்றத்தின் சார்பில் பேராசிரியர் பீ.மு. மன்சூருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அவர் ராசல்கைமா தமிழ் மன்றத்தின் தமிழ்ச் சேவை தொடர வாழ்த்தினார். ஸ்ரீதர் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ராசல் கைமா தமிழ் மன்ற நிர்வாகக் குழுவினர் பூபதி, அஜ்மல் கான், ஹபிபுல்லா, ஸ்ரீதர், மாசானராஜ், குருமூர்த்தி, காஜா திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், ரசப்தீன், ஜமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹபிபுல்லா, பூபதி, ஸ்ரீதர் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.













Click it and Unblock the Notifications