திருப்பாவை , திருவெம்பாவை -10
திருப்பாவை - 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்.

விளக்கம்:
இந்த பாசுரத்திலும் உறங்கிக்கொண்டிருக்கின்ற பெண்ணே நோன்பு நோக்க எழுப்புகிறாள் ஆண்டாள். 3முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனை தோற்கடித்து அதற்கு பரிசாக கும்பகர்ணன் தன்னுடைய தூக்கத்தை உனக்குக் கொடுத்து சென்று விட்டான் போல் தெரிகிறது. உன்னுடையது பெரும் துயிலாக இருக்கிறதே. மிகுந்த சோம்பலும் உறக்கமும் உடையவளே! எங்களுக்கு அணி போன்றவளே! தூக்கம் தெளிந்து, கதவைத் திறப்பாயாக!"
திருவெம்பாவை - 10
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
இறைவனின் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்களால் அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள உலகங்கள் அனைத்திற்கும் மேலானதாய் முடிவிடமாய் இருக்கிறது. உமையை ஒருபாகத்தில் கொண்ட இறைவன் ஒரேவகையானவன் அல்லன்; அவன் எல்லாமும் ஆனதால் ஒருவனேயும் அல்லன்.
வேதங்களும் வானவரும் மானுடரும் துதித்த போதும் அவன் புகழ் வற்றாதது; அவனோ இணையற்ற உயிர்த்தோழன். அவனுக்கு அடியாரோ கணக்கற்றவர்.
அத்தகைய குற்றமற்ற குலத்தவனான அரனின் கோவிலைச் சார்ந்த பெண்பிள்ளகளே! அவனது ஊர் எந்த ஊர்! எதை அவனது பெயர் என்று கூறுவது? அவனுக்கு யார் உறவினர், யார் அயலவர். அவனை என்னவென்று சொல்லிப் பாடுவது!' என்று இந்தப்பாடலும் சிவபெருமானின் பெருமைகளைப் போற்றிக் கூறுகிறது.












Click it and Unblock the Notifications