மார்கழி பூஜை: திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள்

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
பொருள்:
கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.
திருப்பள்ளி எழுச்சி பாடல் - 1
போற்றியென் வாழ்முதலாகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
ஏற்றுயர் கொடியுடையாய்எனை யுடையாய்
எம்பெருமான்பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்:
இறைவா! எங்கள் வாழ்விற்கு ஆதாரமாக விளங்கும் மூலப்பொருளே! பொழுது விடிந்துவிட்டது, உனது தாமரைப் போன்ற திருவடிகளில் நன்கு பொருத்தமான நறுமண மலர்களைச் சமர்பித்து உன் திருமுகத்தில் மலரும் அருட்புன்முறுவலை மனமகிழ்ச்சியுடன் ஏற்று உன்னை வணங்குகிறோம். சேற்றில் மலரும் செந்தாமரை மலர்கள் சூழ்ந்த வயல்கள் மிகுந்த திருப்பெருந்துறையில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானே! நந்திக் கொடியை உடைய நாயகனே! எங்களை ஆட்கொள்ளும் தலைவனே! திருப்பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!












Click it and Unblock the Notifications