மார்கழி பூஜை: திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
பொருள்:
கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.
திருப்பள்ளி எழுச்சி பாடல் 2
அருணண்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ, நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிறை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே!
விளக்கம்
'சூரியன் கிழக்குத் திசையை நெருங்கிவிட்டான். இருளோ ஓடி அகன்றுவிட்டது. உதயம் ஆனது. 'அதேபோல உன் முகமலரில் கருணையாம் சூரியன் எழுகின்றது. அண்ணலே! உன் கண்களாம் எழில் மலர்கள் விரிகின்றன. அவை விரியும்போதே அடியவர்களாம் வண்டுகள் சூழ்ந்து ரீங்காரமிடுகின்றன. இவற்றை நீ அறிந்துகொள்.
'அருள்நிதியை அள்ளி வழங்கவரும் ஆனந்தமாகிய மலையே, அலைகடலே! திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே, துயிலகன்று எழுவாயாக!












Click it and Unblock the Notifications