மஸ்கட்டை கட்டிப்போட்ட மகாகவி பாரதி.. மெய்சிலிர்க்க வைத்த மேடை நாடகம்!!
மஸ்கட்: மஸ்கட்டில் நடைபெற்ற பாரதி யார் என்ற மேடை நாடகம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்! என்ற பாரதியின் கனவை, வள்ளுவர் நிறைவேற்ற பராசக்தி அருள் புரிந்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா? ஆம்!
கடந்த 20 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை சரியாக 7.15 மணிக்கு, 'பாரதி யார்? எனும் மேடை நாடகம், மஸ்கட் மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் கபூஸ் பின் செய்யது அவர்களின் அருளோடும், ஆசியோடும், அனைத்து மக்களின் ஆதரவோடும், மஸ்கட் நகரில் கோலாகலமாக அரங்கேறியது!

எஸ்பி கிரியேஷன்ஸ் இயக்குனர் ராமன் மற்றும் குழுவினரின் அபரிமிதமான தேசப்பற்றும், அளப்பரிய சமூக அக்கறையும், இசைக்கவி ரமணன் அவர்களின் உன்னத ஆற்றலும், வசனமும், பாரதியை ஓமன் நாட்டிற்கு அழைத்து வந்தது என்றால் மிகையல்ல!
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மஸ்கட் தமிழ் மக்களைக் கட்டிப்போடும் தந்திரம் பாரதிக்கு மட்டுமே உண்டு! அப்பப்பா! என்ன நடை! என்ன பாவனை! என்ன தோற்றம்! பாரதியே மீண்டும் வந்து விட்டானோ என்ற உணர்வை அனைவருக்கும் தந்தது இசைக்கவியின் ஒப்பற்ற தியாகத் தோற்றமான 'பாரதி'!
அதற்குச் சற்றும் குறைவில்லாத வகையில் ஈடு கொடுத்து, செல்லம்மாவாகவே மாறினார் என் அன்புச் சகோதரி தர்மா ராமன் அவர்கள்! குவளை கிரிஷ்ணமாச்சாரியாராக நடித்த சகோதரர் விஜய் சிவா, தன்னுடைய ஓய்வற்ற நிகழ்வுக்கிடையே, இதற்கெனவே மெனக்கெட்டு வந்து, தன் பங்கைச் சிறப்பாகச் செய்து அனைவரையும் சிந்திக்க வைத்தார்!
அது மட்டுமா, அன்பு மகன் விவேக் பாரதி, சகோதரர்கள் விட்டல் நாராயணன், பரமேஸ்வரன், சன் டிவி புகழ் ஸ்ரீ கணேஷ், சகோதரி தீபா, கிருத்திகா, மேக்கப் குமார், லைட் சார்லஸ், மேடை அமைப்பிற்கு யுவராஜ் என அனைவரும் அவரவர் பணியில் மிளிர்ந்தனர்.
இதற்கு இசை அமைத்த என் அன்பு இளவல் வீணை வித்வான் பரத்வாஜ் இராமன் தொடப் போகும் உச்சத்திற்கு அளவே இல்லை எனலாம்!பாரதியார் பாடல்களுக்கு நடன அமைப்பச் செய்த திருமதி. ரேவதி சுந்தர் அவர்களின் உழைப்பு அளவிட முடியாதது!
இவர்களோடு இணைந்து நடித்த உள்ளூர் பங்களிப்பாளர்கள் தூள் கிளப்பினார்கள்!
இந்நிகழ்வை,மஸ்கட்டில் வசிக்கும் கவிஞரும், எழுத்தாளருமான சுரேஜமீ, நடத்தி வரும் திருக்குறள் பாசறை எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது! கவிஞரோடு துணை நின்ற கவிஞரின் மனைவி ரேவதி, குழந்தைகள் ஜனனி (அனுஜா), மீரா (அஞ்சனா), மற்றும் சுரேஷ், சேகர், ஆனந்தி உள்ளிட்ட அத்துனை நண்பர்களும், அனுசரணையாளர்களும் இந்த நிகழ்வை ஒரு வெற்றித் திருவிழாவாகவே மாற்றியிருந்தனர்.
பாரதியின் கனவான அயல்நாடு செல்லவேண்டும் என்பது, ஓம் எனும் நாமத்தோடு தொடங்கும் ஓமனில் நிறைவேறி இருக்கிறது என்றால், கனவு மெய்ப்படும் என்ற சத்திய வாக்கின் உண்மை விளங்கும்! வாழ்க பாரதி! வளர்க இசைக்கவி! எழுக பாரதம்!












Click it and Unblock the Notifications