தீபாவளியன்று செல்லப் பிராணிகளின் ‘இம்சை அரசன்’ ஆகாதீர்கள்...
சென்னை: நாளை தீபாவளிப் பண்டிகை. தீபாவளி என்றாலே புத்தாடை, பட்சணம், பட்டாசு இவை தான் சிறப்பு.
நாம் மகிழ்ச்சியாக புத்தாடை உடுத்தி, பட்சணங்கள் சாப்பிட்டு பட்டாசு வெடிக்கும் போது சுற்றுச்சூழல் பற்றி மட்டும் யோசிக்காமல், நமது செல்லப்பிராணிகள் குறித்தும் கொஞ்சம் கவனமெடுத்துக் கொண்டால் நல்லது.
நம்மை நம்பியே இருக்கும் நமது செல்லப்பிராணிகளான நாய், பூனை போன்றவை பாதுகாப்பாக அதேசமயம் பயமின்றி இருக்க என்ன செய்யலாம்..? இதோ சில டிப்ஸ்...

இம்சை அரசனாகாதீர்கள்....
அதிக சத்தங்களை உண்டாக்கும் பட்டாசுக்களை வெடிக்கும் போது, நமக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் ஐந்தறிவு உயிரினங்களான செல்லப்பிராணிகளுக்கோ அவை இம்சை தரும் என்பதை முதலில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தனியாக விடாதீர்கள்...
சுற்றிலும் அதி பயங்கரமான பட்டாசு சத்தம் கேட்கையில், தனிமையில் இருக்க பயப்படும் செல்லப் பிராணிகள். எனவே, அதுபோன்ற சமயங்களில் அவைகளின் அருகில் அமர்ந்திருப்பது அவற்றிற்கு தைரியத்தைக் கொடுக்கும்.

உணர்வுகளை மதியுங்கள்...
ஒரு பட்டாசு போட்டதுமே, ஓடி வந்து உங்கள் வீட்டு நாய் கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொள்கிறதா...? அவைகளைப் பொறுத்தவரை பாதுகாப்பான இடம் உங்கள் வீடு தான். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அதனை துன்புறுத்த எண்ண மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் அது அவ்வாறு செய்கிறது.

செயற்கைச் சத்தம்....
எனவே, சுத்தமான வீட்டிற்குள் வந்து அசுத்தம் செய்யாதே என அதனை விரட்டாமல் முன்கூட்டியே அதற்குத் தேவையான அதிக சத்தம் கேட்காத அறையில் அவற்றை விடுவது சிறந்தது. ஏனெனில் பட்டாசுச் சத்தம் என்பது இயற்கையானதல்ல என்பது அவற்றிற்கு தெரிவதாலேயே அவை மிகவும் பயப்படுகின்றன.

சத்தமில்லாமல்....
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை சத்தமில்லாத பட்டாசு வெடிக்க உத்தரவிடுவதற்கு நமக்கு உரிமையில்லை. ஆனால், அதே சமயம் நாம் அத்தகைய உறுதி மொழியை எடுத்துக் கொள்ளத் தடையில்லை. செல்லப் பிராணிகள் வைத்திருப்பவர்கள் முடிந்தவரை சத்தமில்லாத பட்டாசுக்களைப் பயன் படுத்தி பண்டிகையைக் கொண்டாடலாம்.

சுத்தி..சுத்தி வாங்க
எப்போதும் செல்லப் பிராணிகளைச் சுற்றி குடும்ப உறுப்பினர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

பேரு வச்சவரே சோறு வைங்க....
பண்டிகை கால குஷியில் அவற்றிற்கு நேரத்திற்கு உணவளிக்க மறந்து விடாதீர்கள். நமக்கு தான் பட்சணங்கள் சாப்பிட்டு வயிறு புல்லாகி இருக்கும். அந்த நினைப்பில் செல்லப் பிராணிகளுக்கும் சாப்பாடு கொடுக்க நினைவாய் இருங்கள்.

காதை மூடிடுங்க....
அதிக சத்தங்களிலிருந்து செல்லப்பிராணிகளைத் தப்பிக்க வைப்பதற்காக இன்று மார்க்கெட்டில் நிறைய பொருட்கள் கிடைக்கின்றன. உதாரணமாக ‘இயர்மஃப்' போன்றவை. முன்கூட்டியே திட்டமிட்டு அவற்றை வாங்கி செல்லப் பிராணிகளுக்கு அணிவித்து விடலாம்.












Click it and Unblock the Notifications