புலத்திலே பதியம்
Subscribe to Oneindia Tamil
வித்தூன்றி நிலத்தில்
வேர் கொண்டெழும் வரைக்கும்
விட்டு வைத்து விட்டு,
மிளகாய் நாற்றுப் போல
பக்குவமாய்
பிடுங்கவில்லை.
எருவும், தழையும்
இலை குழையும் போட்டு
எட்டடிக்கு நாலடி பாத்திகட்டி
கத்தரிக் கன்று போல
எங்களை நடவில்லை.
பூச்சாடி நிறைய
புதுசா மண் போட்டு
நட்ட தடி முளைக்கும்
நாளை எதிர்பார்த்து
ரோசாச் செடி போல
கவனிப்புச் செய்யவில்லை.
நட்ட பின் தோட்டத்தில்
பூவாளி நீரும்,
நாலாம் நாள்;
எட்டாம் நாள்
இறைப்புகளும்
புகையிலைக்கன்றி
எங்களுக்கில்லை.
கூடில்லை
வேலியில்லை
வெயில் கொடுமைக்கு
குழை கூடக் குத்தவில்லை!
பிறந்த மண்ணிலிருந்து
வேரோடு பிடுங்கி
உயிர்...
பிழைத்துப் போவென
எறிந்தார்கள்.
வந்து விழுந்தோம்
புலத்தில்.
பதியன்களாய்;
தக்கன முளைத்தோம்
தகாதன,
வரும் வழியிலேயே
அழிந்து போனோம்!!












Click it and Unblock the Notifications