கண்ணில் தெரியுது வானம்- ஈழநாதன்
ஷெல் கூவியன்றி
சேவல் கூவி விடியும்
எங்கள்
இளங்காலைகள்.
நான்காம் சாமத்திலும்
நிம்மதியாய்
படுக்கை அறையில்
தூங்கிக் கொண்டிருப்போம்.
பதுங்கு குழி மூடி
நட்ட ரோசா
பூத்துப்
பனிக்குளித்து நிற்கும்.
சோக கீதம் கேட்காது
சுப்பிரபாதத்துடன்
இனிதே நடக்கும்
எங்கள் துயிலெழுகை.
இயற்கை மரண
அறிவித்தல்களை மட்டுமே
தாங்கிவரும்
காலைத் தினசரிகள்.
இலவசமாய்
பத்திரிக்கை படித்தபின்
நல்லதையே சொல்லிப்போகும்
பக்கத்து வீட்டு மாமா.
வரிசையில் நிற்காது
வாங்கி வந்த பாணுடன்
நிறைவுறும்
காலையுணவு.
பொம்மர் வராததால்
மதிய இடைவேளைக்குப் பின்னும்
தொடரும்
பாடங்கள்
அடையாள அட்டையின்றி
சோதனைச் சாவடியின்றி
விரும்பியபடி
எங்கும் பயணம்
மாலையில்
ஒழுங்காக வீடுதிரும்பும்
இளைஞர்கள்,
யுவதிகள்.
இருட்டியபின்னும்
அடங்காத
ஊர்.
************
அலாரத்தின் ஓசையில்
திடுக்குற்று விழித்தபோது
வானொலி
காலைச் செய்தியை
ஒலிபரப்பியது.
"இலங்கை
இனப்பிரச்சனைக்கு
விரைவில்
சுமுகத் தீர்வு.
ஜனாதிபதியும் புலிகளும்
நம்பிக்கை தெரிவிப்பு".