உலகறிந்த தமிழ்ப் பேனா
உலக அரங்கில்
ஈழத்துக் குரல் எழுப்பிய
மூன்றாவது பேனாவும்
மூச்சிழந்ததோ...!
ஈழத்து வரலாற்றை
பேனா முனையில் வைத்து
ஈட்டியாக வீசியவன்
ஈரவிழிகள் நசுங்கியதோ...!
கடதாசியும் பேனாவும்
காதலித்த கதிரவன்,
தமிழ் வீடுகளில் எல்லாம்
வலம் வந்த தினகரன்...!
நிரந்தரம் இல்லா வாழ்வில்
நிரந்தரமான விடிவுக்காய்
குரல் கொடுத்த குலமகன்
குரல்வளை அறுக்கப்பட்டதோ...!
பொய்கள் கூடி பேய்களாய்
ஆட்சி செய்யும் தீவில்
மெய்கள் திரட்டி மின்னலாய்
எழுந்து வந்த எழுத்தாளன்...!
இனவெறி நரகம் தொட்டு
இதயத்தில் குருதி சொட்ட
ஈழமக்கள் வாழ்வுதன்னை
உலகத்தின் காதுகளில் ஓதியவன்..!
தட்டச்சு வழியாக முன்னேறி
கணினி மொழி பேசியவன்
தமிழ் வலையில் ஊறியவன்
உண்மைக் கதை ஊட்டியவன்...!
அச்சுறுத்தல்கள் தினம் வந்தும்
அஞ்சாத ஆண்மகனாய்
புத்தன் தலை குனிய
தமிழ் மானம் காத்தான்...!
எச்சில் சோற்றுக்காய் ஏங்கும்
எட்டப்பன் வேலை பார்த்து
எச்சிலைக் கூட விழுங்கும்
துரோகத்தின் உச்சங்களே...!
சிங்களக் குசினியேலே குரையுங்கள்
எலும்புத் துண்டு போட்டே
உங்கள் எலும்பை உடைப்பார்கள்
உருளும் தலைகளோடு தொலைவீர்கள்...!
களத்திலே போராடும் வீரனுக்காய்
கடதாசியிலே போராடியவன்- இன்று
கயவர்களின் கைகளிலே...
காலனிடம் தோற்றுவிட்டான் !
""ஒரு நிமலனையோ ஒரு நடேசனையோ
இல்லை இந்த சிவராமனையோ
மண்டையில் போடுவதால்...
உங்கள் இலக்கை அடையமாட்டீர்கள்...!
உறுதியோடு உரத்துச் சொன்னவன்
ஊடகவியலாளனாய் உறங்கிவிட்டான்
உயர்தலைவனின் விருதினை பெற்றவன்
மாமனிதனாய் இன்று ஆகிவிட்டான்...!
தமிழன் பிடித்தால் பேனா- இனி
செலுத்தினால் அது பீரங்கியாகும்
உள்ளங் கையில் ஊடகம்
உலகைத் தொடும் நாடகம்!
சனநாயகம் சமாதானம்
துப்பிப்போகும் துரோகம்
பொங்கியெழு தலைவா- மீண்டும்
புதுப் பரணி பாடுவோம்..!
- தமிழன்([email protected])
(சமீபத்தில் இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் தாராக்கி சிவராம் தர்மரத்தினத்தின் நினைவாகஎழுத்தப்பட்ட கவிதை)
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications