நாம் யார்?
- முபாரக் ரஸ்வி
வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள்!
வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள்!
சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள்!
நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள்!
தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள்!
கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!
ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள்!
நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ.டி.எம். மெஷின்கள்!
பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள்!
ஏ.சி.காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள்!
வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள்!
தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள்!
அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள்!
உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!
முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள்!
கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!
பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள்!
- முபாரக் ரஸ்வி ([email protected])












Click it and Unblock the Notifications