ஒரு தூக்கணாங்குருவியின் தூக்குமேடை
குற்றம் செய்தால்லல்லவா தண்டனை.
மேலே செல்வோம் மேடையை நோக்கி!
பாலாற்றைச் சார்ந்த வயல்வெளி
ஆறு வற்றிப் போனதால்
பாலாறு பாலையானது- ஆதலால்
பாலையைச் சார்ந்த வயல்வெளி
பாலையைச் சார்ந்த நிலம்
இலக்கணத்தில் இதற்கு பெயர் சொல்ல
தொல்காப்பியன் தான் வர வேண்டும்.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கருவேல மரங்கள்
ஒரெயொரு மரத்தில் குருவிக்கூடுகள்
தூக்கணாங் குருவிக்கூடுகள்.
கூட்டமாய் வாழ மற்ற உயிர்கட்கு
கற்றுக்கொடுத்தவை இவையாகக் கூட இருக்கலாம்.
மரத்தில் பசுமை இல்லை- ஆனால்
கூடுகளில் பசுமை இருந்தது.
மரத்தின் பசுமையை
கூடுகள் கொண்டன போலும்.
கீச்! கீச்!! என்ற சத்தம்.
கூட்டுத் துவாரங்களில் குருவிகள் எட்டிப்பார்ததன.
உச்சிக்கு வரவிருந்த சூரியன்
மீண்டும் உதிக்கச்சென்றுவிட்டான்.
கீழ்வானம் வெட்கத்தை விட்டுச் சிரித்தது!
அந்த சிரிப்பொலி அடங்குமுன்
ஒரு சோகத்தின் பரிணாமம்?
பின்னிப்பிணைந்த இரண்டு கூடுகள்
ஒரு வீடு இரு வாசலாய்!
ஒரு வீடு இரு வாசல் - அந்தக்கூட்டில்
இரண்டு குருவிகள்.
ஒன்று சற்றே நிறம் மங்கலாக!
அங்கே கத்தியில்லை! இரத்தமில்லை!
இரண்டும் ஒன்றையொன்று
சண்டையிட்டுக் கொண்டிருந்ததன.
கூடுவிட்டுக் கூடு பாய்ந்த்ததா?
கருத்து வேறுபாடா?
உரிமை மறுக்கப்பட்டதா?
காரணம் தெரியவில்லை.
தனியாகச் சென்றது நிறம் மங்கிய குருவி.
புறமுதுகு காட்டி ஓடியதா? இல்லை.
விட்டுக் கொடுத்து சென்றதா? வைத்துக்கொள்வோம்.
தனியாகச் சென்ற அந்தக் குருவி
அமர்ந்தது அருகில் உள்ள மின் கம்பியில்
மின்சாரம் பாயாத அந்த மின் கம்பியில்
நேரம் நகர்ந்தது- குருவி நகரவேயில்லை.
என்னுள் மின்சாரம் பாய்ந்தது.
கதிரவன் உச்சிக்கு வந்தான்.
நானும் சென்றேன் என் குடில் நோக்கி!
நினைவலைகள்- இல்லை இல்லை
ஆழிப்பேரலைகள் என் தூக்கத்தை இழுத்துச் சென்றன!
மறுநாள் வந்தேன் என் வயல்வெளி நோக்கி.
அங்கே மின் கம்பியில்
உருவாகிக் கொண்டிருந்தது புதிய கூடு.
கூடும் வளர்ந்தது
குருவியின் தனிமை என்னுள் குடிகொண்டது!
குருவியின் தனிமை எவ்வகை?
இனம் இனத்தைப் பிரித்ததா?
இனத்திலிருந்து இனம் பிரிந்ததா?
குருவியின் தனிமைக்கு மானசீகமாய்
ஒருதலையாய் ஆதரவு தந்தேன்.
நாளும் நகர்ந்தது- இப்போது
கூடும் வளர்ந்து விட்டிருந்தது.
ஒரு பறவையின் முயற்சி!
ஊர்க்குருவி பருந்தாகுமா? இல்லை!
அது உயிருள்ள ஆகாய விமானம்.
குருவியின் கூட்டுப் பிரவேசம்
அங்கே தூரத்து இடி முழக்கம்
வெட்டும் மின்னல்கள்
வானம் பன்னீர் தெளித்தது!
என் கனவு - வயல் வெளிக்கான மின் இணைப்பு
உத்தரவும் வந்தது.
என் தேவை பூர்த்தியானது.
நாளை மின் இனைப்பு வந்துவிடும்.
பாலையைச் சார்ந்த வயல்வெளிக்கு
பசுமை போர்த்தி அழகு பார்க்கலாம்.
ஏதோ இதயத்தில் வாளைச் செருகியது போன்ற பீதி!!!
ஒரு கணம் சிலையானேன்.
கம்பியில் மின்சாரம் பாய்ந்தால்
தூக்கணாங்குருவிக்கு அது தூக்குமேடையா?
முயற்சியின் வெற்றிக்கு இது தான் நான் தரும் பரிசா?
மின் இணைப்பை திரும்பப் பெற்றேன்.
வித்தியாசமாய்ப் பார்த்த மனிதர்கள்!!!
வயல்வெளி சென்றேன்!
முத்தெடுக்கப்போய் முத்தானேன்.
தூக்கணாங்குருவி கீச்சிட்டு வரவேற்றது.
பாலாற்றின் கனவுப் பிரவாகம் -
நெஞ்சில் அலைமோதியது.
பாலாறு பாலையில்லை!!!
-முத்துக்குமார்([email protected])