வீழ்த்தப்பட்ட சிம்மசொப்பனம்!
கட்டபொம்மன் என்றதும் நினைவுக்கு வருவது மிடுக்கான வீரம்!
அடுத்து நினைவுக்கு வருவது துரோகத்தின் திடுக்கிட வைக்கும் கொடூரம்!
ஆங்கிலேயரின் சிம்மசொப்பனம்!
கட்ட மறுத்தது அவர்களுக்கு கப்பம்!
எம் மண்ணுக்கு யாம் ஏன் கட்டவேண்டும் கப்பம்?
எம் நாட்டுக்கு வரி விதிக்க நீர் யார்?
என்றெல்லாம் சுதந்திரத் தீ பறக்க
எண்ணமெல்லாம் அந்நியனை வெளியேற்ற
தாகம் கொண்ட அந்த மாவீரனை சாய்த்தது கொடும் துரோகம்!
காட்டிக் கொடுத்தனர் பாவியர், சில பரிசிலுக்காய்!
வாட்டமுடன் விடை கொடுத்தனர், உம் பின் நின்றோர்!
அன்று வெள்ளையனை வெளியேற்ற நீவிர் குரல் கொடுத்தீர்!
அன்றிருந்த மக்கள் இன்றிருக்க மனம் ஏங்குகிறது!
எத்தனை எத்தனை மாற்றங்கள் இத்தனை ஆண்டுகளில்!
எத்தனையெத்தனை மாற்றங்கள், மக்கள் எண்ணங்களில்?!
வெளிநாட்டுத் தயாரிப்புகள் வேண்டி விரும்பி கேட்கின்றார்..
வெளிநாட்டு கலாச்சாரத்தை சிவப்புக் கம்பளம் கொண்டு வரவேற்கிறார்
அந்நிய உணவு வகைகள் இன்று பெரும் சந்தை!
நீவிர் அன்று உயிர்விட்டது வீண்தானோ? வருத்தம் கொள்ளுது மனம்!
- ஆகர்ஷிணி