Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐடி துறைக்கு ஆப்பு வைக்கும் ஏஐ.. கொத்து கொத்தாக வெளியேற்றப்படும் ஐடி ஊழியர்கள்.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025-26 நிதியாண்டில் தகவல் தொழில்நுட்பத் (ஐடி) துறையில் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் அதிக அளவில் நிரப்பப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. பொதுவாக, ஐடி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியமர்த்தும். ஆனால், இந்த வருடம் அந்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் குறைவு

இந்த ஆண்டு மொத்தமாக பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்பில்லை. ஒருவேளை அவசரத் தேவை ஏற்பட்டால் ஒன்று அல்லது இரண்டு ஊழியர்கள் மட்டும் பணியமர்த்தப்படலாம். அமெரிக்காவின் வர்த்தகப் போர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இந்திய ஐடி துறை பாதிக்கப்பட்டுள்ளது. அவுட்சோர்சிங் தொடர்பான புதிய விதிகளும் வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

artificial intelligence Wipro Microsoft jobs

ஏஐ-யின் தாக்கம்

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், அமேசான் நிறுவனம் அதிகப்படியான தேவையை பூர்த்தி செய்ய புதிய ஊழியர்களை பணியமர்த்தியது. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை தொலை தூரத்திலிருந்து பணிபுரிய அனுமதித்தன. இதனால் தொழில்நுட்பத் துறையில் பணியமர்த்தல் மற்றும் சம்பளம் அதிக அளவில் உயர்ந்தது. ஆனால், இந்த நிலை நீண்ட காலம் நீடிக்கவில்லை. தொற்றுநோய் முடிவுக்கு வந்த பிறகு, அமேசான், கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் சுமார் 100,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. தற்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனங்கள் ஏஐ திறமை மற்றும் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கின்றன.

PwC நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஏஐ வேலைவாய்ப்பு முன்னறிவிப்பின்படி, அனைத்து தொழில்களிலும் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஏஐ பயன்பாடு அதிகமாக உள்ள தொழில்களில் ஊதியங்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன. இதன் விளைவாக, ஏஐ திறன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஏஐ அல்லாத திறன்களை விட ஏஐ திறன்கள் 66% வேகமாக உருவாகின்றன, இது கடந்த ஆண்டை விட 2.5 மடங்கு அதிகமாகும்.

இந்தத் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ஐடி ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர். ஏஐ தங்கள் திறன்களை பயனற்றதாக்கும் என்று பல ஐடி வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும் ஏஐ-இல் வெற்றிகரமாக இருக்கத் தேவையான பயிற்சி தங்கள் நிறுவனங்களால் வழங்கப்படுவதில்லை என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர். சமீபத்திய ஏஐ தொடர்பான பணிநீக்க அறிவிப்புகள் அவர்களின் கவலைக்கு மேலும் வலு சேர்க்கின்றன.

சிக்னல்ஃபயர் எச்சரிக்கை

பிரபல தனியார் தொழில் ஆராய்ச்சி நிறுவனமான சிக்னல்ஃபயர், ஏஐ காரணமாக உலகம் முழுக்க பணி இழப்பு அதிகரித்து உள்ளதாகவும், புதிய பணி சேர்ப்புகள் கடுமையாக சரிந்து உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிக்னல்ஃபயர் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் புதிதாக பணியமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கை 2019 முதல் 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது. முன்னதாக, இந்த நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களில் புதிய பட்டதாரிகள் சுமார் 15 சதவீதமாக இருந்தனர். அந்த எண்ணிக்கை இப்போது வெறும் 7 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களின் புதிய கோடிங்கில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இப்போது ஏஐ தான் எழுதுகிறது. இதனால் வரும் காலங்களில் ஏஐ வழியாக வரக்கூடிய வேலை வாய்ப்புகள் மிகக் கடுமையான சரிவை சந்திக்கும் என கூறப்படுகிறது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கணக்கெடுப்பில், பணியமர்த்தல் சமயங்களில் HRகளில் கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் ஏஐ அனுபவம் உள்ள நபர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கிறார்கள். நான்கில் ஒரு நபருக்கு இப்போது ஏஐ திறன் தேவையாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஐபிஎம் நிறுவனத்தில் பணிநீக்கம்

பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் பெரும்பாலான வேலை நீக்கங்கள் வரும் நாட்களில் செய்யப்படும் என்று நிறுவனத்தின் மனிதவள (HR) துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோமேஷன் காரணமாக ஐபிஎம் 200 பணியாளர்களை நீக்கியது. எச் ஆர் துறையிலும் பல நூறு பேரை நீக்கியது. முக்கியமாக எச்.ஆர் பணிகள், மெயில் அனுப்புதல், சம்பளம், வரி போன்றவற்றை கணக்கிடும் பணிகள் எல்லாம் ஏஐகளிடம் விடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மனிதர்களால் செய்யப்பட்ட வேலைகளை ஏஐ செய்வதால், பல பணிகள் நீக்கப்படுகின்றன. மனிதர்களின் நேரடி ஈடுபாடு இல்லாத வேலைகள் அனைத்தையும் ஏஐ வைத்து மாற்ற ஐபிஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக உலகம் முழுக்க ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஐபிஎம் சுமார் 200 எச். ஆர் பணியிடங்களை ஏஐ அமைப்புகள் மூலம் மாற்றியது. எச். ஆர் பணிகளான தகவல்களை அனுப்புவது, பணியாளர்கள் தகவல்களை சேகரிப்பது, பணியாளர் கேள்விகளுக்கு பதிலளித்தல் அல்லது உள் ஆவணங்களை சோதனை செய்தல் போன்ற பணிகளைச் செய்யக்கூடிய மென்பொருள் அமைப்பை அந்த நிறுவனம் பணியில் அமர்த்தியுள்ளது. இது எச். ஆர் செய்யும் எல்லா பணிகளையும் செய்துவிடும் என்பதால் எச். ஆர் ஊழியர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

கோடிங், டெஸ்டிங் செய்யக்கூடிய பணியாளர்கள் மற்றும் அதிக சம்பளம் வாங்கும் உயர் மேனேஜர் பொறுப்பில் உள்ளவர்களும் நீக்கப்பட்டு உள்ளனர். வரும் நாட்களில் ஏஐ அமைப்புகளை அதிக அளவில் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இப்போது உள்ள ஏஐ பயன்பாட்டை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதனால் பணி இழப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிநீக்கம்

உலகம் எங்கும் ஐடி துறையில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. பல நாடுகளில், பெரிய நிறுவனங்கள் ஏஐ வருகையை காரணம் காட்டி, ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலும் கடுமையான பணி இழப்புகள் நடந்து உள்ளன.

மைக்ரோசாப்ட் மேற்கொண்ட சமீபத்திய பணிநீக்கங்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய மென்பொருள் பொறியாளர்களை கடுமையாக பாதித்துள்ளன. அவர்கள் உருவாக்கிய ஏஐ அமைப்பே அவர்களின் பணி நீக்கத்திற்கு காரணமாக அமைந்தது. அந்த நிறுவனம் AI-சார்ந்த கோடிங் முறைக்கு தற்போது மாறி வருகிறது. மைக்ரோசாப்ட் மேற்கொண்ட சமீபத்திய பணிநீக்கங்கள் உலகளவில் சுமார் 6,000 ஊழியர்களைப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. வாஷிங்டன்னில் மட்டும் 40 சதவீதத்திற்கும் அதிகமான பணிநீக்கங்கள் நடந்துள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் உருவாக்கிய ஏஐ அமைப்பே அவர்களின் வேலை இழப்பிற்கு காரணமாக மாறி உள்ளது.

2025-26 ஆம் ஆண்டில் ஐடி துறையில் புதிய வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்றும், ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பணிநீக்கங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+