பார்க்க அப்படியே ஒரிஜினல் மாதிரி.. எலான் மஸ்கிற்கு ஆதார் கார்டை உருவாக்கிய சாட்ஜிபிடி AI.. பேராபத்து
டெல்லி: இந்த காலத்தில் நாளுக்கு நாள் ஏஐ செயலிகளின் பயன்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பார்க்க அப்படியே உண்மை போல இருக்கும் போலியான ஆதார் கார்டுகளை பிரபல ஏஐ நிறுவனமான சாட்ஜிபிடி தயாரித்துள்ளது. இந்த ஆதார் அட்டை பார்க்க அப்படியே உண்மையானது போல இருக்கிறது. ஏஐ எந்தளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதை உணர்த்துவதாகவே இது இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ துறை தான் படுவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஏஐ துறையின் இந்த அசுர வளர்ச்சியைத் தொடங்கி வைத்தது ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி. அதன் பிறகு ஜெமனி, மெட்டா, க்ராக் என ஏகப்பட்ட ஏஐ நிறுவனங்கள் வந்துவிட்டன. ஆனால், இன்னும் ஏஐ சந்தையில் சாட் ஜிபிடி தான் முன்னிலையில் இருக்கிறது.

போலி ஆதார்
அதைத் தக்கவைத்துக் கொள்ள சாட் ஜிபிடி நிறுவனம் தனது ஏஐ செயலிகளில் புதிய புதிய வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் தான் சாட்ஜிபிடி, துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜிபிடி-4o செயலியில் சொந்தமாகப் போட்டோ உருவாக்கும் திறன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு யூசர்கள் போட்டோக்களாக உருவாக்கித் தள்ளிவிட்டனர். இணையத்தில் டிரெண்டான கிப்லி ஸ்டைல் போட்டோ எல்லாம் அதில் உருவாக்கப்பட்டவை தான்.
சாட் ஜிபிடி
அதேநேரம் சாட் ஜிபிடி செயலியின் இந்த போட்டோ உருவாக்கும் திறன் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது. அதன் ஆபத்தை உணர்த்தும் வகையிலான போட்டோக்கள் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதாவது நெட்டிசன்கள் சிலர் சாட்ஜிபிடி மூலம் போலி ஆதார் அட்டைகளை உருவாக்கியுள்ளனர். அதை தங்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ பேரும் ஆபத்தை ஏற்படுத்தும் என பலரும் எச்சரித்து வரும் சூழலில், அதன் ஆபத்தை உணர்த்துவதாகவே இது இருக்கிறது.
சாட் ஜிபிடி உருவாக்கும் போலியான ஆதார் அட்டைகள் கிட்டதட்ட உண்மையான ஆதார் அட்டைக்கு நெருக்கமாகவே இருக்கிறது. அதன் பயன்படுத்தும் போட்டோவை உற்றுக் கவனித்தால் மட்டுமே அது போலியானது என்பது தெரிய வருகிறது. இருப்பினும், சாதாரணமாக ஒருவர், இந்த ஏஐ உருவாக்கிய ஆதார் அட்டையைப் பார்த்தால் அதை உண்மை என்றே நம்பிவிடுவார்கள். அந்தளவுக்குத் தத்ரூபமாக ஏஐ உருவாக்கும் ஆதார் அட்டைகள் இருக்கிறது.
எலான் மஸ்கிற்கு ஆதார்
சாட்ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோருக்கு கூட பார்க்கத் தத்ரூபமாக இருக்கும் ஆதார் அட்டையை அடித்துக் கொடுத்து இருக்கிறது சாட்ஜிபிடி. அதில் க்யூ.ஆர் கோட், ஆதார் நம்பர் முதற்கொண்டு எல்லாமே அப்படியே இருக்கிறது.
ஆதார் கார்டு மட்டுமில்லை.. சாட்ஜிபிடியால் பான் கார்டு கூட அப்படியே ரெடி செய்ய முடிகிறது. பார்க்க உண்மையான பான் கார்டு போலவே இருக்கும் பான் அட்டைகளை சாட்ஜிபிடி நொடிகளில் ரெடி செய்து வருகிறது. இந்தியாவில் ஆதார் அட்டை என்பது உதய் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. பான் கார்டு என்பது வருமான வரித்துறையால் நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆபத்து இருக்கு
சாட்ஜிபிடியின் இந்த இமேஜ் உருவாக்கம் என்பது மிகவும் துல்லியமான ஒன்றாக இருக்கிறது. சாட்ஜிபிடியின் முந்தைய மாடல்களில் கூட இமேஜ் இந்தளவுக்குத் துல்லியமாக இருக்காது. ஆனால், இந்த வெர்ஷனில் இமேஜ் மிகத் துல்லியமாக இருப்பதால் இதில் ஆபத்து இருப்பது உண்மை தான் என்பதை சாட்ஜிபிடி நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது.
தற்போது சாட் ஜிபிடி நிறுவனம் தனது செயலியின் இமேஜ் உருவாக்கத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி தற்போது மைனர் குழந்தைகள் சார்ந்த போட்டோக்களை உருவாக்க முடியாது.. ஆபாச போட்டோக்கள், வன்மை நிறைந்த போட்டோக்கள், வெறுப்புணர்வு தூண்டும் போட்டோக்களை உருவாக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "ஆதார் கார்டுகளை பொறுத்தவரை நம்மால் பேக் எண்ட்டில் செக் செய்ய முடியும். ஒருவர் ஆதாரை காட்டும் போது அதை பேக்- எண்ட்டில் செக் செய்து சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், பான் அல்லது ஓட்டுநர் உரிமங்கள் போன்ற பிற அடையாள அட்டைகளில் பேக் எண்ட்டில் போட்டோ இருக்காது. எனவே, அதை செக் செய்வது சவாலானதாக இருக்கும்.
மேலும், இந்தளவுக்குத் துல்லியமான ஆதார் போட்டோக்களை உருவாக்கியுள்ளது என்றால்.. அதற்கு எவ்வளவு டேட்டே தரப்பட்டு இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதைக் கண்காணிக்கவும் தடுக்கவும் உரியச் செயல்முறை தேவை. இல்லை என்றால் வரும் காலங்களில் நாம் எதிர்பார்க்காத அளவுக்குப் பாதிப்புகள் ஏற்படும்" என்றார்.
போலி ஆதாரை கண்டுபிடிப்பது எப்படி
சரி ஒருவர் உங்களிடம் போலியான ஏஐ உருவாக்கிய ஆதார் அட்டையைத் தருகிறார்கள் என்றால் அதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்ற கேள்வி உங்களுக்கு வரும். அது ரொம்பவே ஈஸி. சில அடிப்படை விஷயங்களை நோட் செய்தாலே அது உன்மையானா ஆதார் அட்டையா இல்லை போலியா என்பது தெரிந்துவிடும்.
முதலில் ஆதாரில் உள்ள போட்டோவை பாருங்கள். ஏஐ உருவாக்கிய படமாக இருந்தாலும் சரி, அவர்கள் அப்லோட் செய்து உருவாக்கி இருந்தாலும் சரி, ஒர்ஜினல் ஆதாரில் இருக்கும் படத்தை போல இருக்காது. போலி ஆதார் அட்டையில் உள்ள போட்டோ பார்க்கவே வித்தியாசமாக இருக்கும். அதேபோல போலி ஆதார் அட்டையில் உள்ள எழுத்துகளைக் கவனித்தாலும் ஓரளவுக்குக் கண்டுபிடிக்கலாம். குறிப்பாக ஆதார் மற்றும் அரசின் லோகோ சற்று மாறி இருக்கும் அதை நோட் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அதில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தாலே அது உண்மையானதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மாற்று வழி
ஸ்கேன் செய்ய எல்லாம் எனக்கு விருப்பம் இல்லை எனச் சொன்னால் இன்னொரு வழியும் இருக்கிறது.. அதாவது ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளமான உதய் அல்லது மை ஆதார் இணையதளத்திற்குச் செல்லுங்கள்.. அங்கு verify Aadhaar என ஒன்று இருக்கும் அதில் செல்லுங்கள். பிறகு செக் ஆதார் வேலிடிட்டி என்பதை கிளிக் செய்து ஆதார் நம்பர் மற்றும் கேப்ட்சா பதிவிடுங்கள். உண்மையான ஆதார் என்றால் அடுத்த ஸ்டெப்பிற்கு செல்லும். போலி ஆதார் நம்பர் என்றால் இந்த பக்கத்தைத் தாண்டாது.
ஒருவேளை வேறு ஒருவரின் நம்பரை தந்து போலி ஆதாரை உருவாக்கி இருந்தாலும், இந்த பிராசஸில் அடுத்த பக்கத்தில் உண்மையாக அது யாருடைய ஆதார் என்பது போட்டோ உடன் வரும். அதை வைத்து நாம் ஆதார் உண்மையா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications