ஒரே நாளில் ரூ.51 லட்சம் கோடி போச்சு.. சம்பவம் செய்த சீனா.. பிரபல அமெரிக்க நிறுவனத்திற்கு விழுந்த அடி
நியூயார்க்: அமெரிக்க நிறுவனங்கள் தான் ஏஐ துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், அமெரிக்க நிறுவனங்களுக்குச் சவால் விடுக்கும் வகையில் இப்போது சீனா டீப்சீக் என்ற ஏஐ டூலை அறிமுகம் செய்துள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த என்விடியா தனது சந்தை மதிப்பில் 600 பில்லியனை (ரூ.51 லட்சம் கோடி) இழந்துள்ளது.
இப்போது சமீப ஆண்டுகளாகவே ஏஐ நிறுவனங்கள் தான் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ என்ற சூழலே உருவாகி வருகிறது.

அமெரிக்க நிறுவனங்கள்:
இதுவரை வெளியான அனைத்து ஏஐ நிறுவனங்களுமே அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களாகவே உள்ளன. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் தான் ஏஐ துறையில் இதுநாள் வரை தனிக்காட்டு ராஜா போல ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஓபன் ஏஐயின் சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி இப்படி உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ஏஐ நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகவே இருந்து வந்தன. இந்த ஆதிக்கத்தை காலி செய்யும் விதமாகச் சீனா இப்போது இறங்கி அடித்துள்ளது.
அதிநவீன இந்த டீப்சீக் ஏஐ காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் ஆடிப்போய் இருக்கிறது என்பதே உண்மை. இது அமெரிக்க பங்குச்சந்தையிலும் கூட எதிரொலித்துள்ளது. டீப்சீக் காரணமாக அமெரிக்காவின் முன்னணி சிப் தயாரிப்பு கம்பெனியான என்விடியா (Nvidia) நிறுவனத்திற்கு மிக பெரிய அடி விழுந்துள்ளது. ஏஐ துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை காலி செய்யும் விதமாகச் சீனாவின் டீப்சீக் ஏஐ உருவெடுத்துள்ள நிலையில், என்விடியா பங்குகள் கடுமையாகச் சரிந்துள்ளன.
என்விடியா நிறுவனம்:
அமெரிக்காவில் ஏஐ நிறுவனங்களுக்குத் தேவையான செமி கண்டக்டர்களை இந்த என்விடியா நிறுவனம் தான் உற்பத்தி செய்து வருகிறது. சமீப காலமாக ஏஐ நிறுவனம் அதிவேகமாக வளர்ந்த நிலையில் என்விடியா நிறுவனத்தின் பங்குகளும் உச்சம் தொட்டது. ஒரு கட்டத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் என்ற நிலையைக் கூட என்விடியா அடைந்தது. அந்த என்விடியா நிறுவனம் தான் இப்போது சீனாவின் டீப்சீக் ஏஐ டூல் காரணமாக மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளது.
ரூ.51 லட்சம் கோடி போச்சு:
அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள என்விடியா நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 17 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது சில மணி நேரத்தில் அது தனது சந்தை மதிப்பில் சுமார் 600 பில்லியன் டாலரை இழந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 51 லட்சம் கோடி ரூபாயாகும். இது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ்டிபி என்ற வர்த்தக தளத்தில் ஆய்வாளராக உள்ள கேத்லீன் ப்ரூக்ஸ் கூறுகையில், "ஏஐ துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குச் சீனா சவால் விடுத்துள்ளது. அமெரிக்காவைக் காட்டிலும் சீனாவால் அதைச் சிறப்பாகவும் குறைந்த செலவிலும் செய்ய முடியுமா என்பதே இப்போது பலருக்கும் உள்ள கேள்வியாக உள்ளது" என்றார்.
சீன நிறுவனம்:
கிழக்கு சீன நகரமான ஹாங்ஜோவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியது தான் டீப்சீக் ஏஐ டூல்.. இந்த நிறுவனம் இப்போது ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்று இரு ஏஐ மாடல்களாக வெளியிட்டுள்ளது.. அதில் தற்போது மக்களால் யூசர்களால் R1 மாடலை மட்டுமே பயன்படுத்த முடியும். சாட்ஜிபிடி, ஜெமனி ஏஐ உள்ளிட்டவற்றின் அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், டீப்சீக் ஏஐ டூலில் அப்படி இல்லை. எல்லாமே இலவசம் தான். மேலும், மற்ற ஏஐ மாடல்களை காட்டிலும் டீப்சீக்கை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications