Gen Zக்கு தான் ஜாக்பாட்.. AI பல கோடி சம்பளத்தை அள்ளி கொடுக்கும்.. சாட்ஜிபிடி ஓனர் குட் நியூஸ்
சியாட்டில்: AI வருகைக்குப் பிறகு வேலைவாய்ப்பு சந்தை மொத்தமாக மாறி வருகிறது. இதற்கிடையே அடுத்த 10 ஆண்டுகளில் ஒருவரது கேரியர் என்பதையே AI மொத்தமாக மாற்றி அமைக்கும் என சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். அதிகச் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற போதிலும் அதற்கு முன்பு மிக பெரிய வேலையிழப்பு நடக்கும் என அவர் தெரிவித்தார்.
AI வந்த பிறகு சர்வதேச வேலைவாய்ப்பு சந்தை மொத்தமாக மாறி வருகிறது. பல்வேறு நிறுவனங்களிலும் வேலையிழப்புகளும் கணிசமாக ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே வேலைவாய்ப்புகள் எப்படி மாறும் என்பது தொடர்பாக சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

கேரியர் என்பதே மாறிடும்
அதாவது அடுத்த 10 ஆண்டுகளில் ஒருவரது கேரியர் என்பதையே AI மொத்தமாக மாற்றி அமைக்கும் என சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். இருப்பினும், தொடக்கத்தில் இதனால் மிகப் பெரிய வேலையிழப்பு ஏற்படலாம் என்றும் அதன் பிறகே மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார்.
இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "2030களின் நடுப்பகுதியில் இன்றைய மாணவர்கள் முற்றிலும் புதிய, அதிக ஊதியம் பெறும் தொழில்களில் ஈடுபடலாம் என்று ஒரு எதிர்காலத்தைச் சித்தரித்தார். அதேசமயம், செயற்கை நுண்ணறிவு பல பாரம்பரிய வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக ஒழிக்கும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
பல மடங்கு அதிக சம்பளம்
தொழில் தொடங்குவோருக்கு மிகவும் உற்சாகம் தரும் ஒரு காலகட்டம் வரப்போகிறது. எனது பார்வையில் 2035ல் பட்டம் பெறும் ஒரு மாணவர் இப்போதிருக்கும் வேலைவாய்ப்பு மார்கெட்டிற்குள் நுழையவே மாட்டார். அவர் கார்ப்பரேட் வேலைக்கு விண்ணப்பித்து மெல்ல புரமோஷன் அடைந்து உயர்நிலைக்குப் போவது என்பதே நடக்காமல் போகலாம்.. அதற்குப் பதிலாக இன்று அரிதாகவே இருக்கும் துறைகள் அப்போது மிகப் பெரியளவில் வளர்ந்து இருக்கும். அதில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். தற்போது கிடைக்கும் சம்பளத்தை விடப் பல மடங்கு அதிகச் சம்பவமும் அவர்களுக்குக் கிடைக்கும்.
விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.. அதாவது படித்து முடித்து பட்டம் பெற்றவர்கள் உடனே சூரிய மண்டலத்தை ஆராயும் மிஷனில் அனுப்பப்படலாம்.. இந்த வேலைகள் முக்கியமானதாக இருக்கும். மேலும், அசாதாரண அளவுக்கு அதிக ஊதியத்தையும் வழங்கும். இப்போது மனிதர்கள் செய்யும் பல வேலைகளை AI செய்ய ஆரம்பித்த பிறகே இதுபோன்ற புதிய துறைகள் உருவாகும்" என்றார்.
வேலைகள் பறிபோகும்
அதேநேரம் அவரது பேச்சில் ஒரு தெளிவான எச்சரிக்கையும் உள்ளது. அதாவது இந்த மாற்றம் சீராக இருக்காது என்பதை ஆல்ட்மேன் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். அதிக ஊதியம் தரும் வேலைகள் உருவானாலும் கூட அதற்கு முன்பு வேலைவாய்ப்பு சந்தையை AI மொத்தமாக மாற்றி அமைக்கும் என்பதை அவர் வெளிப்படையாகவே சொல்கிறார். திரும்பத் திரும்பச் செய்யக்கூடிய அல்லது கணிக்கக்கூடிய வேலைகள் நிச்சயம் மறைந்துபோகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Gen Z இளைஞர்கள்
இந்த நேரத்தில் வேலைச் சந்தையில் நுழையும் Gen Z இளைஞர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என சாம் ஆல்ட்மேன் கூறினார். ஏனெனில் அவர்கள் இந்த மாற்றத்தின் தொடக்கத்திலேயே வேலைச் சந்தையில் நுழைகிறார்கள். AI கருவிகள் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் மாறும்போது, அதைத் துல்லியமாகப் பயன்படுத்திக் கொள்ள இவர்கள் சரியான நிலையில் இருப்பார்கள் என்பது ஆல்ட்மேன் கருத்து!












Click it and Unblock the Notifications