இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை திறக்கிறது ஓபன் ஏஐ! புது திட்டத்தை கையில் எடுக்கும் சாம் ஆல்ட்மேன்
டெல்லி: சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன்ஏஐ தனது முதல் இந்திய அலுவலகத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் டெல்லியில் திறக்கவுள்ளது. இந்தியச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதன் தடத்தை ஆழமாகப் பதிக்க இது ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தனது அணியை விரிவுபடுத்தும் நோக்கில் ஓபன்ஏஐ பணியாளர்களை நியமிக்கத் தொடங்கியுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆதரவைப் பெற்ற ஓபன்ஏஐ-க்கு தற்போது இந்தியாவில் பிரக்யா மிஸ்ரா மட்டுமே ஒரே ஊழியராக உள்ளார்.

ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் இதுகுறித்து கூறுகையில், "எங்கள் முதல் அலுவலகத்தைத் திறந்து உள்ளூர் அணியை உருவாக்குவது என்பது, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவை நாடு முழுவதும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும், இந்தியாவிற்காகவும் இந்தியாவோடு இணைந்து செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கும் ஒரு முக்கியமான முதல் படியாகும்.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுக்கான உற்சாகமும் வாய்ப்புகளும் நம்பமுடியாதவை. இந்தியாவின் அற்புதமான தொழில்நுட்பத் திறமை, உலகத் தரம் வாய்ந்த மேம்பாட்டு சூழல், மற்றும் இந்தியாஏஐ மிஷன் மூலம் வலுவான அரசு ஆதரவு போன்றவை இந்தியாவை உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தலைவராக மாற்றும் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளன" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ஓபன்ஏஐ காலடி பதிக்க பல காரணங்கள் உள்ளன. சாட்ஜிபிடி தளத்தைப் பயன்படுத்தும் பயனர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது பெரிய சந்தையாகும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான இணைய பயனர்களை இலக்காகக் கொண்டு, ஓபன்ஏஐ இந்த வாரம் ரூ.403 என்ற குறைவான விலையிலான மாதாந்திர திட்டத்தைத் அறிமுகப்படுத்தியுள்ளது. அடிப்படை இலவசத் திட்டத்துடன், பிற பிரீமியம் சந்தா திட்டங்களும் கிடைக்கின்றன.
ஓபன்ஏஐ வெளியிட்ட புதிய சந்தைத் தரவுகளின்படி, இந்தியாவில் சாட்ஜிபிடி பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். கடந்த ஒரு வருடத்தில், சாட்ஜிபிடியின் வாராந்திர செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வலுவான இருப்பு மற்றும் அதிக பணியாளர்களுடன், ஓபன்ஏஐ, அரசாங்கம், வணிகங்கள் மற்றும் உருவாக்குநர்களுடனான கூட்டாண்மைகளை அதிகரிக்க முடியும். மேலும், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவை மலிவாகவும், நாடு முழுவதும் அணுகக்கூடியதாகவும் மாற்றும் வகையில், இந்தியாவிற்கான அம்சங்களையும் கருவிகளையும் உருவாக்க முடியும்.
இந்த விரிவாக்கம், வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்தில் ஆரம்பகால ஒழுங்குமுறைகளை வடிவமைப்பதற்கான ஓபன்ஏஐ-யின் முயற்சியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு.
இந்தியாவில் ஓபன்ஏஐ சில சட்டச் சவால்களையும் எதிர்கொள்கிறது. செய்தி நிறுவனங்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் சாட்ஜிபிடி-க்கு பயிற்சி அளிக்க தங்கள் உள்ளடக்கத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளை ஓபன்ஏஐ மறுத்துள்ளது.
கூகுளின் ஜெமினி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் பெர்பிளெக்சிட்டி போன்ற போட்டியாளர்களிடமிருந்து இந்தியாவில் ஓபன்ஏஐ கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்கள் மேம்பட்ட திட்டங்களை சந்தையில் பல பயனர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications