நிலவில் AI சர்வர்! எலான் மஸ்க் திட்டம்! வேகமெடுக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி
வாஷிங்டன்: செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இதற்கான டேட்டா சென்டர்களை பூமியில் வைப்பதைவிட நிலவில், விண்வெளியில் வைக்கவே எலான் மஸ்க் போன்ற ஜாம்பவான்கள் திட்டமிட்டு வருகிறார்கள். இதை கேட்க அறிவியல் கற்பனை கதை போன்று இருக்கலாம். ஆனால் இன்றைய டெக் உலகம் இதை நோக்கிதான் போய்க்கொண்டிருக்கிறது.
இன்று நாம் பயன்படுத்தும் OpenAI, Gemini, Deepseek போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், Google Drive, Microsoft OneDrive, Dropbox போன்ற கிளவுட் சேவைகள், அனைத்து முக்கிய இணையதளங்கள், மின் வணிகத் தளங்கள், வங்கிச் சேவைகள் மற்றும் மொபைல் செயலிகள் ஆகியவை செயல்பட, Facebook, Instagram, YouTube போன்ற தளங்கள் இயங்க என டிஜிட்டல் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் டேட்டா சென்டர்கள் அவசியம்.

எலான் மஸ்க், சுந்தர் பிச்சையின் பிளான்
ஆனால், பூமியில் மின்சாரக் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதும், புதிய உள்கட்டமைப்புகளுக்கு அரசு அமைப்புகள் அனுமதி வழங்குவதில் தாமதப்படுத்துவதும் இவர்களை விண்வெளியை நோக்கி உந்தி தள்ளியிருக்கிறது. அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான ஆற்றலை வழங்க, விண்வெளியில், சந்திரனில், பெரிய தரவு மையங்களை உருவாக்க வேண்டும் என்று ஜெஃப் பெசோஸ், எலோன் மஸ்க், சுந்தர் பிச்சை போன்ற டெக் ஜாம்பவான்கள் யோசித்து வருகிறார்கள்.
விண்வெளியில் புதிய யுகம்
நிலவு நமக்கு இந்த பிரபஞ்சம் கொடுத்த மிகப்பெரிய பரிசு என்று அமேசான், ப்ளூ ஆரிஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கூறியிருக்கிறார். நிலவின் மேற்பரப்பை தொழில் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புக்கான தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ப்ளூ ஆரிஜின் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் விண்வெளிப் பயணச் செலவைக் குறைக்க முயற்சிக்கின்றன. கூகிள் 'ப்ராஜெக்ட் சன்கேட்சர்' என்ற புதிய கணினி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது நிலவில் அமையவுள்ள கணினி திட்டமாகும். என்விடியா மற்றும் ஸ்டார்கிளவுட் போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்வெளி சார்ந்த ஜி.பி.யுகளை(GPUs) ஆய்வு செய்து வருகின்றன.
சூரிய சக்தியின் பயன்பாடு
சூரிய சக்தியால் இயங்கும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் உதவியுடன் விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு சர்வர்களை நிறுவுவதற்கான திட்டங்களை மஸ்க் வகுத்து வருகிறார். இதெல்லாம் விண்வெளியில் டேட்டா சென்டர்கள் உருவாக ரொம்ப காலம் ஆகாது என்பதை உணர்த்துகிறது.
டேட்டா சென்டர்களை உருவாக்குவது மிகுந்த செலவு பிடித்த வேலை. அப்படி இருக்கையில் விண்வெளியில் டேட்டா சென்டர்களை உருவாக்குவது எப்படி சாத்தியம்? இதற்கு நிறைய பணம் செலவாகாதா? என்று கேள்வி இயல்பாக எழலாம்.
செலவை குறைக்கவும் திட்டம்
உண்மைதான் இன்றைய தேதியில் இது எக்கச்சக்க செலவு பிடித்த வேலையாக தோன்றலாம். ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் இந்த நிலைமை மாறலாம் என்று நாசாவின் முன்னாள் விஞ்ஞானியும், மத்திய புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியருமான பில் மெட்ஸ்ஜர் கூறியிருக்கிறார்.
விண்வெளியில் சூரிய வெப்பம் எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். பூமியின் வளிமண்டலத்திற்கு மேலே சூரிய ஒளி தொடர்ச்சியாக கிடைக்கிறது. அங்கே இரவு இல்லை, மேகங்கள், புயல்கள் அல்லது வானிலை இடையூறுகள் இல்லை. இதனால் மின்சார தடை ஏற்படவே செய்யாது.
பூமியில் டேட்டா சென்டர்களை குளிர்வித்துக்கொண்டே இருக்க வேண்டும். விண்வெளியில் இயற்கையாகவே குளிர் இருப்பதால் இதற்கான செலவு மிச்சம். மட்டுமல்லாது பூமியில் அரசாங்க அனுமதி பெறுவதை போல விண்வெளியில் யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவேதான் விண்வெளியில் டேட்டா சென்டர்களை அமைத்து அதன் மூலம் AI சர்வர்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications