இந்தியர்களை பயன்படுத்தி கொள்ளும் அமெரிக்க நிறுவனங்கள்! இதுல டிரம்ப் ஓவர் பேச்சு வேற.. என்ன நடக்கிறது
சியாட்டில்: இந்தியாவுக்கு இலவச ஏஐ வழங்க ஆகும் செலவை அமெரிக்கர்கள் ஏற்று வருவதாகவும் இது தவறான விஷயம் என்றும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியிருந்தார். இது இணையத்தில் மிகப் பெரிய விவாதமாக மாறியுள்ளது. நவரோ சொல்வது ஏன் தவறானது.. இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் செய்யும் செயல் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ சமீபத்தில் இந்தியா தொடர்பாகச் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது இந்தியாவில் ஏஐ சேவைகளை வழங்க ஆகும் செலவை ஏன் அமெரிக்கர்கள் ஏற்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சாட்ஜிபிடி போன்ற தளங்கள் அமெரிக்க மண்ணில், அமெரிக்க மின்சாரத்தைப் பயன்படுத்தும் போதிலும், இந்தியர்களுக்கே இதில் அதிக நன்மை இருப்பதாகக் குறிப்பிட்டார்.

செலவை ஏன் ஏற்கணும்?
அவர் மேலும்,"இந்தியாவில் AI சேவைகளைக் கொடுக்க ஆகும் செலவை அமெரிக்கர்கள் ஏன் ஏற்க வேண்டும்? இவர்கள் அமெரிக்க மண்ணில் இருந்து செயல்பட்டுவிட்டு.. இந்தியா, சீனா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கே அதிகச் சேவைகளைத் தருகிறார்கள்" எனக் கூறியிருந்தார். இது மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. இந்தியாவுக்கு மிகக் குறைந்த ரேட்டில் அமெரிக்க நிறுவனங்கள் ஏஐ டூல்களை வழங்கி வழங்கி சேவை செய்து வருகிறது என்ற ரேஞ்சுக்கு நவரோ பேசியிருந்தார். ஆனால் அவரது கருத்து முற்றிலும் தவறானது.
இந்தியா தான் பெரிய மார்கெட்
அமெரிக்காவிற்கு வெளியே சாட்ஜிபிடிக்கு இந்தியா தான் மிக பெரிய மார்கெட்டாக உள்ளது. சாட்ஜிபிடி டவுன்லோடுகள், தினசரி பயன்பாடு என எல்லாமே மிக வேகமாக உயர்ந்து வருகிறது. அதை வைத்துப் பார்த்தால் நவரோ சொன்னதும் சரியே. ஆனால், சாட்ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட செயலிகள் ஏதோ சேவைக்காக இந்தியாவுக்கு இலவசமாக அல்லது குறைந்த ரேட்டில் சேவையை வழங்குகிறது என்பதில் துளியும் உண்மை இல்லை. இவை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதை அவர் மறந்துவிட்டார். லாபம் தான் அவர்களின் ஒரே குறிக்கோள்!
ஏர்டெல் மற்றும் ஜியோ செயலிகளுடன் இணைந்து சில குறிப்பிட்ட ஏஐ டூல்கள் ஓராண்டுக்கு இந்திய யூசர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதும் உண்மை தான். ஆனால், இதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. முதலில் கூகுள், ஓபன் ஏஐ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு இந்தியர்களிடமிருந்து பயன்பாட்டுத் தரவுகள் தேவை. டேட்டாவை சேகரிக்கவே இவ்வளவு குறைந்த ரேட்டில் அல்லது இலவசமாகத் தங்கள் சேவையை வழங்குகிறார்கள்.
டேட்டா முக்கியம்
ஏன் அவர்களுக்கு டேட்டா தேவைப்படுகிறது என்ற கேள்வி வரலாம்.. செயற்கை நுண்ணறிவு இப்போது ஆரம்பிக்கக் கட்டத்தில் இருக்கிறது. எனவே, சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி போன்ற மாடல்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு, தனிப்பட்ட தரவுகள் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. இந்த டேட்டாவை காசு கொடுத்து வாங்க முடியாது.. பயனர்களிடமிருந்து மட்டுமே பெற முடியும். இந்தியாவில் பல கோடி யூசர்கள் எளிதாகக் கிடைப்பார்கள் என்பதால் அந்த பெரு நிறுவனங்கள் டேட்டாவை எடுக்கும் ஒரு இடமாகவே இந்தியாவைப் பார்க்கிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் அவர்கள் இலவசமாகத் தங்கள் சேவையைக் கருதுகிறார்கள்.
நவரோ கருதுவதற்கு மாறாக, இந்தியாவில் ChatGPT இலவசமாகக் கிடைப்பது OpenAI-ன் தொண்டு இல்ல. உண்மையில், இந்தியப் பயனர்கள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு வழங்கும் ஊதியமில்லா பயிற்சி மற்றும் இலவசத் தரவுகளிலிருந்து இது பலன் பெறுகிறது.
சீனா
சீன நிறுவனங்களிடம் இருந்து தங்கள் எதிர்கால பிஸ்னஸ்ஸை பாதுகாக்கும் வழி என்பது இரண்டாவது காரணம்.. எப்போதும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகும் ஆரம்ப நாட்களில் நிறுவனங்களிடையே மிக பெரிய போட்டி இருக்கும். கடந்த காலங்களில் பல புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது இப்படி தான் நடந்துள்ளது. இறுதியில் ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாக முடியும். சீனாவின் டீப்சீக் ஏஐக்கு சாதகமாக நிலைமை சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே இந்தியாவில் கிட்டத்தட்ட அமெரிக்கா இலவசமாகத் தனது வழங்குகிறது.
இதுதான் திட்டம்
எதிர்காலத்தில் ஏஐ-க்கு இந்தியா மிகப் பெரிய மார்கெட்டாக உருவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். தொடக்கத்திலேயே மலிவான அல்லது இலவச அணுகலை வழங்குவதன் மூலம் இந்தியச் சந்தையை வளைப்பது தான் ஏஐ நிறுவனங்களின் திட்டமாக இருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் கட்டணம் வசூலிக்கும்போது இந்தியாவில் இருந்து அதிகபட்ச லாபத்தைப் பார்க்க முடியும்.












Click it and Unblock the Notifications