செல்போனுக்குள் ஒரு எக்ஸ்பெர்ட்.. சாட்ஜிபிடி கொண்டு வந்த GPT-5.. மிரள வைக்கும் புது அப்டேட்
சியாட்டில்: இப்போது ஏஐ துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. புதுப்புது ஏஐ வெர்ஷன்கள் நமது கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இதற்கிடையே ஓபன் ஏஐ நிறுவனம் இப்போது புதிதாக GPT-5ஐ அறிமுகப்படுத்தியது. இது முந்தைய சாட்ஜிபிடி மாடல்களை காட்டிலும் மிகவும் பவர்புல்லானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறையில் வளர்ச்சிகள் வேகமாக நடக்கும் அதன்படி இப்போது ஏஐ துறைகளில் வளர்ச்சி வேகமாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாட்ஜிபிடி வெளியாகி இந்த வளர்ச்சியைத் தொடங்கி வைத்தது. அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களும் அதிநவீன ஏஐ மாடல்களை வெளியிட்டு வருகிறது.

சாட்ஜிபிடி
அதேபோல சாட்ஜிபிடியும் கூட தொடர்ச்சியாக அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே ஓபன் ஏஐ நிறுவனம் இப்போது புதிதாக GPT-5ஐ அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்பு சாட்ஜிபிடி-இல் இரு வேறு மாடல்கள் இருந்த நிலையில், அதை நீக்கிவிட்டு இந்த ஒரே மாடல் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை சாட்ஜிபிடி 5 என்றும் அழைக்கிறார்கள். முந்தைய வெரெஷனில் ரிதனிங்கிற்கு 'Think Longer' என்ற டூலை பயன்படுத்த வேண்டிய இருந்தது. ஆனால், இப்போது தானாகவே இந்த ஆப்ஷன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
ஓபன் ஏஐ
இது தொடர்பாக ஓபன் ஏஐ நிறுவனம் கூறுகையில், "ஜிபிடி 5 என்பது ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு. இது பெரும்பாலான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஒரு திறமையான மாடலையும், கடினமான சிக்கல்களுக்குப் பகுத்தறியும் ஒரு மாடலையும் (GPT5 thinking) கொண்டுள்ளது. உரையாடலின் வகை, சிக்கலின் தன்மை, தேவைப்படும் கருவிகள் மற்றும் பயனர் நோக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விரைவான தீர்வை வழங்க இது பயன்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்லுநர் உடன் பேசுவது போல
ஜிபிடி 5 கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு நிபுணரைப் போன்றது என்றும் அந்த அறிவை அனைவரும் எளிதாகப் பெறும் ஒரு கருவியே ஜிபிடி 5 என்று ஓபன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "எந்தவொரு தலைப்பாக இருந்தாலும் சரி, உங்களுக்கு வல்லுநருடன் பேசுவது போன்ற உணர்வை GPT-5 கொடுக்கும். ஐபோன்கள் பழைய டிஸ்பிளேவில் இருந்து ரெட்டினா டிஸ்ப்ளேவிற்கு மாறியதை போன்றது" என்றார்.
எந்த துறைகளில் வளர்ச்சி
முந்தைய மாடல்களில் இருந்து மேம்பட்ட பதிப்பாக இருக்கும் GPT-5, குறிப்பாகக் கோடிங் மற்றும் சாப்ட்வேர் டெவலப்மெண்டில் மிகச் சிறப்பாகச் செயல்படும் என்று ஓபன் ஏஐ கூறுகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் கூறுகையில், "GPT5 எங்கள் மிகச் சிறந்த கோடிங் மாடல். சிக்கலான ஃப்ரண்டெண்ட் உருவாக்கவும் மற்றும் பெரிய ரெப்போசிட்டரிகளை பிழைதிருத்தம் செய்யவும் இது பெரியளவில் உதவும். இணையதளம், செயலிகள், கேம்ஸ் என எதுவாக இருந்தாலும் ஒரே வரியில் உருவாக்க முடியும். உங்களை யோசனைகளை நிஜமானதாக மாற்றுவதே இதன் நோக்கம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவறான தகவல்களை உருவாக்காமல் இருக்கவும் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களை காட்டிலும் ஜிபிடி 5 குறைந்த அளவே தவறான தகவல்களைக் கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களைக் காட்டிலும் ஜிபிடி 5 மாடலின் பிழைகள் 45 சதவீதம் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications