மதுரை சவுராஷ்டிரா பெண்ணை மணம் முடித்த ஆரியங்காவு தர்ம சாஸ்தா
ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலில் வீற்றிருக்கும் ஐயப்பன் அன்னை புஷ்கலா தேவியுடன் தம்பதி சமேதராக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 10ஆம் தேதியன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
சபரிமலை: தவநிலையில் சபரிமலையில் பிரம்மாச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், கிரகஸ்தராக காட்சி தரும் ஆலயம் தான் ஆரியங்காவில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில். தம்பதி சமேதராக காட்சி தரும் ஆர்யங்காவு சாஸ்தா கோவிலில் பெண்கள் தம்பதியராக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் தர்மசாஸ்தாவாக அவதரித்த மணிகண்டன் மதுரையின் சவுராஷ்டிரா பெண்ணை மண முடித்தது எப்படி என்பது பற்றிய சுவாரஸ்யமான புராண கதையை பார்க்கலாம்.
பிரம்மச்சரிய தெய்வமான தர்மசாஸ்தா ஐயப்பன் இவ்வுலக வாழ்வை தவிர்த்து, இவ்வுலக மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்களை காப்பதற்காகவும் சபரிமலை என்னும் சபரிபீடத்தில் தவக்கோலத்தில் இருந்து வருவதாக ஐதீகம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு, பதினெட்டு படியேறி தர்மசாஸ்தாவான ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஐயப்பனை மணம் முடிப்பதற்காகவே, சபரிபீடத்திற்கு அருகிலேயே, மாளிகைப்புறத்து அம்மனும் காலம் காலமாக காத்திருக்கிறார். என்றாவது ஒரு நாள், ஒரு கன்னிசாமியாவது என்னை தரிசிக்காமல் திரும்பி செல்கிறாரோ, அன்றைக்கு நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஐயப்பன், மாளிகைப்புறத்து அம்மனுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளதாக ஐதீகம்.
தர்மசாஸ்தாவிற்கு திருமணம்
அதே சமயம், ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலில் வீற்றிருக்கும் ஐயப்பன் அன்னை புஷ்கலா தேவியுடன் தம்பதி சமேதராக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 10ஆம் தேதியன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
புஷ்கலையை மணந்த ஐயப்பன்
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு ஆடைகளை நெய்து கொடுக்கும் மதுரை சவுராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்த புஷ்கலை என்ற பெண், ஐயப்பன் பூஜைக்கு தேவையான பணிவிடைகளை பக்தி சிரத்தையோடு செய்து வந்தார். அப்போது புஷ்கலைக்கு பிரம்மச்சாரியான ஐயப்பன் மீது காதல் ஏற்பட்டது. புஷ்கலையின் பக்தியில் மகிழ்ந்த ஐயப்பனும் அவரை மணம் முடிக்க முடிவெடுத்தார்.
மார்கழியில் திருமணம்
இந்த விஷயம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கும், சவுராஷ்டிர சமுதாயத்திற்கும் தெரிய வர, அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இரு தரப்பு உறவின்முறைகளும் மார்கழி மாதம் 10ஆம் தேதியன்று ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலில் கூடி தர்மசாஸ்தா ஐயப்பனுக்கும் புஷ்கலைக்கும் திருமணம் முடித்து வைத்ததாக தலவரலாறு கூறுகிறது. அதே போல் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
திருக்கல்யாண வைபவம்
இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு சம்பந்தி என்ற முறையில், மதுரை சவுராஷ்டிர சமுதாயத்திற்கு திருமண அழைப்பிதழ் அனுப்புவது வழக்கம். சவுராஷ்டிர மக்கள், ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிர மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தி திருக்கல்யாண வைபவத்தை நடத்திக் கொடுப்பது வழக்கம்.
திருமண நிச்சயம்
மாம்பலத்துறை பகவதி என்ற ஆரியங்காவு புஷ்கலா தேவி கோவிலில் இருந்து மணமகள் அழைப்பு ஊர்வலம் தொடங்குகிறது. பக்தர்கள் ஒன்று சேர்ந்து அன்னை புஷ்கலா தேவியை ஜோதி ரூபமாக ஆரியங்காவு கோவிலுக்கு அழைத்து வருவார்கள்.
இதனையடுத்து தாலப்பொலி என்னும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமும், அதையடுத்து பாண்டியன் முடிப்பு என்னும் திருமண நிச்சயதார்த்த நிகழ்வும் நடைபெறும். இதனையடுத்து தர்மசாஸ்தா-அன்னை புஷ்கலா தேவி திருக்கல்யாண வைபம் நடைபெறும்.