தீபாவளி கொண்டாட்டம்: நரகாசுர வதமா? ராமர் வனவாசத்தில் இருந்து திரும்பிய நாளா?
தீபாவளி பண்டிகை கொண்டாட பல காரணங்கள் கூறப்படுகிறது. நரகாசுரனை வதம் செய்த தினமே தீபாவளியாக கொண்டாடுவதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் ராவண வதம் முடிந்து வனவாசம் முடிந்து ராமர் சீதை லட்சுமணன் நாடு திரும்ப
சென்னை: ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் நரக சதுர்த்தி நாளில் நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமர் நாடு திரும்பிய நாள் என்றும், லட்சுமி பூஜைக்கு உகந்த நாள் என்றும் கூறப்படுகிறது.
ஒரு திரைப்படத்தில் தலை தீபாவளி பற்றிய பேச்சு வரும் அப்போது ராமரும் சீதையும் தலை தீபாவளியை அரண்மனையில் கொண்டாடினார்களா? அல்லது காட்டில் கொண்டாடினார்களா என்ற கேள்வி வரும் அதற்கு கிருஷ்ணா அவதாரத்தில்தான் நரகாசுர வதம் நிகழ்ந்தது. எனவே தலைதீபாவளியை ராமர் சீதை கொண்டாடியிருக்க மாட்டார்கள் என்று கதாநாயகி பதில் சொல்வார்.
ஆனால் தீபாவளி பண்டிகையை வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரத்துடன் இணைத்து புராணங்களில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.
உஜ்ஜயினியை ஆண்ட மன்னன் விக்ரமாதித்தன் பட்டம் சூட்டிய நாள் தீபாவளியாக கொண்டாடப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர். 1577ம் ஆண்டு நரக சதுர்த்தி தினத்தன்று பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கியதை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.
வாமன அவதாரத்தின் போது கடலுக்கு அடியில் சிறை வைக்கப்பட்டிருந்த பூமாதேவியை மகா விஷ்ணு விடுவித்தார், அப்போது பிறந்தவனே நரகாசுரன் என்கின்றன புராணங்கள். கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தார் என்றும் இந்த வெற்றியை புத்தாடை அணிந்து தீபங்கள் ஏற்றி கொண்டாகின்றனர்.
14 ஆண்டுகாலம் வனவாசம் சென்ற ராமன், சீதா, லட்சுமணன் ராவண வதம் முடிந்து நாடு திரும்பிய நாளில் தீபங்கள் ஏற்றி மக்கள் வரவேற்றனராம் இந்த நாளே தீபாவளித் திருநாள் என்கின்றனர்.
கடவுள் மறுப்பாளர்களே தீபாவளி பண்டிகையை நரகாசுரனுக்கு வீர வணக்க நாளாக அனுஷ்டிக்கின்றனர். எது எப்படியோ மக்களுக்கு ஒரு பண்டிகை நாளும், புத்தாடைகளும், பலகாரமும் கிடைத்ததே அது எந்த அவதாரமாக இருந்தல் என்ன மகிழ்ச்சிக்கு உரிய நாளாக அமைந்தால் சரிதான்.