குருப்பெயர்ச்சி: கன்னி ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. பணம் கொட்டப் போகுது.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்
குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும்.

ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்கள் பெறக்கூடிய பலன்கள், கிடைக்க கூடிய அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 10 ஆம் இடத்துக்கு வருகிறார். பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பது எல்லா ராசிக்கும் பொருந்தாது. பத்தாம் இடத்துக்கு குரு வரும்போது நீச்சம் அடைவதில்லை. அதனால் வேலைக்கு எந்தவித பிரச்சனையும் வராது. புதனுடைய வீட்டுக்கு குரு வருவதால், வேலையில் நிபுணத்துவம் பெறுவது, பயிற்சி பெறுவதற்கான காலமாக இருக்கும். கடமைகளைச் சரியாக செய்வது நல்ல பலன்களைத் தரும். விநாயகப் பெருமானை வழிபட்டு நாளை தொடங்குவது நல்லது.
கன்னி ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக நேரம் அவ்வளவாக சரியில்லை. கண்டகச் சனியின் தாக்கம் தற்போது உள்ளது. 6 ஆம் பாவத்தில் குரு இருக்கிறார். இப்போது ஒரு நன்மை என்றால் கேது ராசியில் இருந்து பெயர்ந்துள்ளது. ராசி மீது கேது அமர்ந்தால் மனதில் தேவையில்லாத குழப்பத்தை உண்டாக்கும். அதுபோன்ற நிலைகள் மாறும். குழப்பங்கள் அனைத்தும் தீரும்.
10 ஆம் பாவத்தில் வந்த குரு வேலை, தொழில், வியாபாரத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். ஆனாலும், தன ஸ்தானத்தை குரு பார்ப்பது, 4, 6 ஆம் இடத்தைப் பார்ப்பது நன்மைகளை அள்ளித் தரும். கடன்களை அடைத்து, பொருள் சேர்க்கும் எண்ணம் உண்டாகும். பணம் கையில் தாங்கக்கூடிய சூழல் ஏற்படும். சேமிப்பு, முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
வாகனம் வாங்குவது, ஆடை அணிகலன் சேர்ப்பதற்கான காலகட்டமாக இருக்கும். 6 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் மிகப்பெரிய யோகங்கள் கிடைக்கும். கடன், நோய், மறைமுக எதிரிகள் இந்த பாவங்களில் இனி சாதகமான பலன்கள் கிடைக்கும். கடனில் இருந்து விடுதலை அடையக்கூடிய காலகட்டமாக இருக்கும். மறைந்திருக்கும் நோய்களை வெளிக்கொண்டு வந்து அதற்கான தீர்வுகள் காணும் சூழலையும் ஏற்படுத்தும்.
எதிரிகளை வெல்வதற்கான சூழல்களை ஏற்படுத்தும். அதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். லட்சுமி நரசிம்மரை வழிபடுவது, தியானம் மேற்கொள்வது நன்மை பயக்கும்.
பெண்களைப் பொருத்தவரை 10 ஆம் இடத்தில் வரும் குரு பகவான் பொறுப்புகளை அதிகம் கொடுப்பார். குடும்பத்தில் பொறுப்பு சுமை அதிகரிக்கும். இடமாற்றம் கிடைக்க மிகவும் கடினமான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு இடத்தில் இருக்கும் சூழல் இருக்கும். அதற்கு சனி பகவான் தடையாக இருப்பார்.
10 ஆம் இடத்தில் குரு பகவான் 2 மாத காலம் லாபத்தில் வரக்கூடியதாக உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தாமதம் ஏற்படும். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்படலாம். இருக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்வது நல்லது. அரசுப் பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத பழிக்கு ஆளாக வேண்டியிருக்கும். வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து முருகனை வழிபடுவது அமோகமான பலன்களைத் தரும். வேலையில் எடுக்கும் முடிவுகளை யோசித்து செய்வது நல்லது.
தொழில், வேலை விஷயங்களில் 6 மாதம் குழப்பம் நீடிக்கும். 6 மாதத்துக்குப் பிறகு அருமையாக இருக்கும். குரு பார்வை இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்க சேமிப்பில் ஈடுபடுவீர்கள். தெரியாத, புரியாத பய உணர்வுகள் ஏற்படும். பழகும் நபர்களிடம் பேசும் வார்த்தைகளில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பதவி உயர்வு கிடைக்கும். நல்ல முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.
6 மாதத்துக்குப் பிறகு எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் பாசிட்டிவாக இருக்கும் விஷயங்களைப் பேசுவது நல்லது. குலதெய்வ வழிபாடு, மீனாட்சி அம்மன் வழிபாடு அருமையான பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications