குரு பெயர்ச்சி 2022: தீபாவளிக்குப்பின் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் வரும்!
சென்னை: மீன ராசியில் வக்ர நிலையில் உள்ள குரு பகவான் தீபாவளி முடிந்து தனது இயல்பு நிலைக்கு திரும்பப் போகிறார். நவம்பர் 16ஆம் தேதி முதல் நேர்கதியில் மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் ஒரு ராசியை கடக்க ஓராண்டுகள் எடுத்துக்கொள்வார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளை கடக்க 12 ஆண்டுகள் ஆகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தற்போது தனது வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். குரு பகவான் சிலருக்கு ஹம்ச யோகத்தை தேடி தருவார். நவம்பர் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு குரு பகவான் மீன ராசியில்தான் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் சஞ்சாரம்,வக்ர நிவர்த்தி, இடப்பெயர்ச்சியால் தீபாவளிக்குப் பிறகு கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது. யாருக்கெல்லாம் 2023ஆம் ஆண்டில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடந்த 7 மாதங்களாகவே மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். குருபகவான் சுப கிரகம். ஒருவரின் வாழ்க்கையை சுபத்துவமாக்கக் கூடியவர். குருபகவானின் பார்வை எத்தனையோ நன்மைகளை ஒருவரின் வாழ்க்கையில் செய்யும்.
மனித வாழ்க்கையில் மிக முக்கியமான அம்சங்களாக உள்ள வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவைகளை கிடைக்கக் செய்பவர் குரு பகவான்.
குரு பெயர்ச்சி எப்போது நடைபெறும் குரு பலன் வந்து விட்டதா என்று பலரும் கேட்கின்றனர். வக்ர நிலையில் பயணித்த குருவினால் கடந்த சில மாதங்களாக பாதிப்புகளையும் பிரச்சினைகளையும் சந்தித்து வந்த உங்களுக்கு தீபாவளிக்குப் பிறகு நல்ல நேரம் வரப்போகிறது. யாருக்கெல்லாம் அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கடகம்
குருவின் பார்வையும் பயணமும் உங்களுக்கு சாதகமான நிலையில் உள்ளது. குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்குத் தீர்வு கிடைக்கும். தள்ளிப் போன திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு களை கட்டும். அறிவுபூர்வமாகவும், அனுபவபூர்வமாகவும் பேசத் தொடங்குவீர்கள்.கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டு. அதேநேரம் சிறு சிறு மனஸ்தாபங்களும் ஏற்படும். காலில் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு.
வேலையில் உற்சாகம்
தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. அச்சமும் மனக்குழப்பமும் நீங்கி ஆனந்தம் அதிகரிக்கப்போகிறது. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். பங்குச்சந்தையில் செய்த முதலீடுகள் மூலம் பணம் வரும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர் உதவுவார். ஆடை, ஆபரணங்கள் சேரும். வாகனத்தை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனி புகழாரம் பாடுவார். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும்.
சிம்மம்
குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எதிர்பார்த்த அயல்நாடு பயணம் சாதகமாக அமையும். வேற்றுமொழி பேசுவோரால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஒரளவு பணம் வரும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். நிலம், வீடு வாங்குவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில், சவாலான வேலையைச் செய்துமுடித்து சாதிப்பீர்கள்.
பிரச்சினைகள் நீங்கும்
குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுவதால் சுப விரையங்கள் ஏற்படும். நல்ல தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். வேலையில் இருந்த பிச்சினைகள் நீங்கும் மன உளைச்சல் நீங்கி மன அமைதி அதிகரிக்கும். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். இப்போது உள்ள சூழ்நிலையில் புது வேலைக்கு மாறும்போது யோசித்துச் செயல்படுங்கள்.
கன்னி
குருபகவானின் நேரடிப் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும், வேலையில் புரமோசனும் கிடைக்கும். உங்களின் வாழ்க்கைத் தரம், வசதி, வாய்ப்புகள் உயரும். குருவின் பார்வையால் திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு விரைவில் கல்யாணம் கூடிவரும். கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
பண வரவு அதிகரிக்கும்
லாப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை படுவதால் தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரப்போகிறது. மகனுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் ஒரளவு அதிகரித்தாலும் செலவுகள் துரத்தும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன் பாக்கிகள் வந்து சேரும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். நீங்கள் நினைத்தபடி பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.