குரு பெயர்ச்சி: அழகான மனைவி..நல்ல வேலையும் கை நிறைய சம்பளத்துடன் புரமோசனும் யாருக்கு கிடைக்கும்?
மதுரை: குரு பகவான் சுப கிரகம் நிறைய நன்மைகளைக் கொடுப்பார். குருவின் பார்வை சுபிட்சங்களைத் தரும்.
குருபகவான் கோச்சார ரீதியாக 2,5,7,9,10,11 ஆகிய இடங்களில் பயணம் செய்யும் நன்மையே செய்வார். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்தை பொருத்து நல்ல மண வாழ்க்கையும் நல்ல வேலையும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும். வேலையில் யாருக்கு புரமோசன் கிடைக்கும்? குரு பகவானால் குடும்ப வாழ்க்கை யாருக்கு எப்படி அமையும் என்று பார்க்கலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் குரு பகவான் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் அமர்ந்து இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல அழகான வசதியான பெண் மனைவியாக அமைவாள். இல்லாவிட்டால் வாழ்க்கையே போர்க்களமாகிவிடும்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் எந்த வீட்டில் குரு இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
பிறந்த ஜாதகத்தில் ஜென்ம குருவாக லக்னத்தில் அமர்ந்திருப்பார் குரு. பொதுவாகவே குரு ஜென்மத்தில் இருந்தால் சிறந்த பேச்சாளராக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும் நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். பெரிய மனிதர்கள், விவிஐபிக்களின் தொடர்பு கிடைக்கும். குரு நல்ல நிலையில் இருந்தால் இந்த பலன் கிடைக்கும். அதே நேரத்தில் குரு பலம் இழந்து பாவிகளுடன் சேர்க்கை பெற்றிருந்தால் உடல்நிலை பாதிப்பு, காரிய தடைகள் ஏற்படும். குரு பகவான் பார்வையால் மனதிற்கு ஏற்ற மனைவியோ கணவனோ கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும்.
ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து சுப கிரகத்தின் கூட்டணியோடு இருந்தால் பணவரவு அபரிமிதமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையாக சந்தோசமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். அன்பான மனைவி குழந்தைகள் கிடைத்து அந்த வீடே ஆனந்தமயமாக இருக்கும். அதே நேரத்தில் இரண்டாவது வீட்டில் குரு தனித்து இருந்தாலோ வறுமை வாட்டும் பணவருமானத்திற்கு தடுமாறுவார்கள். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ பலம் இழந்தோ இருந்தால் குடும்பத்தில் தினம் தினம் சண்டையாகத்தான் இருக்குமாம்.
மூன்றாம் வீட்டில் குரு இருந்தால் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிலும் தனித்துவமாக இருப்பீர்கள். அதே நேரம் மூன்றாம் வீட்டில் குரு தனித்து இருந்தாலோ இளைய சகோதர தோஷம் உண்டாகும். ஆண் கிரக சேர்க்கை இருந்தால் உடன் பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதரர்களால் சங்கடம் உண்டாகும். பாகப்பிரிவினை பிரச்சினை வரும்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்தால் இருந்தால் வசதி வாய்ப்பு கிடைக்கும். செல்வம், செல்வாக்கு அசையா சொத்து யோகம் நல்ல பழக்க வழக்கம் உண்டாகும். உயர்கல்வி யோகம் ஏற்படும். நான்காம் வீட்டில் குரு தனித்து பலம் இழந்து இருந்தால் வீடு,மனை, சொத்து வாங்குவதில் தடை, தாமதங்கள் உண்டாகும்.
ஐந்தாம் வீட்டில் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல் ஏற்படும். குல தெய்வ அருளும் பெற்றோர்களின் ஆசி கிடைக்கும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும், அதே நேரத்தில் ஐந்தில் குரு தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். அதே நேரத்தில் சுப கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் சிறப்பான புத்திரபாக்கியம் அமையும். பிள்ளைகளால் சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்து இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு ஏற்படும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், சிறப்பான குடும்ப வாழ்க்கை உண்டாகும். அதே நேரம் ஆறாம் வீட்டில் குரு பலம் இழந்து இருந்தால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். மருத்துவ செலவுகளால் மன நிம்மதி பாதிக்கப்படும்.
ஏழாம் வீடு களத்திர ஸ்தானம். ஜென்ம லக்னத்தில் இருந்து குரு ஏழாம் வீட்டில் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அழகான கணவனோ கண்ணிற்கும் மனதிற்கும் பிடித்த மனைவியோ கிடைத்து சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல அழகான வசதியான பெண் மனைவியாக அமைவாள். அதே நேரம் ஏழாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திராதிபதி தோஷம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்க்கையில் பிரச்சினை எற்படும். திருமணம் நடந்தாலும் மணமுறிவு ஏற்படும்.

எட்டாம் வீடான அஷ்ட ஸ்தானத்தில் குரு அமர்ந்து இருந்தால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஏற்படும். திடீர் பணவரவு கிடைக்கும். வாழ்க்கை அமைதியாக இருக்கும். அதே நேரம் குரு தனித்தோ பாவிகள் சேர்க்கை பெற்றோ இருந்தாலே பலம் இழந்து இருந்தாலே நோய் பாதிப்பு ஏற்படும். பித்ரு சாபத்தினால் மன அமைதியில்லாத நிலை ஏற்படும். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்.
பிறந்த ஜாதகத்தில் குரு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் இருப்பது நன்மை தரும் அமைப்பு. தாராளமான தன வரவு கிடைக்கும். பூர்வீகத்தால் அனுகூலம் கிடைக்கும். தந்தைக்கு நீண்ட ஆயுள், பொதுப்பணியில் ஆர்வமாக இருப்பீர்கள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு இருந்தால் உயர்பதவி யோகம் தேடி வரும். நேர்மையானவராக இருப்பீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். தனித்து இருந்தால் தடைகள் அதிகரிக்கும். குரு கிரக சேர்க்கை பெற்று பலம் இழக்காமல் இருப்பது நல்லது.
லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு இருந்தால் தாராளமான தன வரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் மூலம் வசதி வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் புகழ் கவுரவம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
ஒருவரின் ஜாதகத்தில் 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் இருந்தால் வீண் செலவுகள் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு 6 அல்லது 8ஆம் அதிபதியாக இருந்தால் நல்ல பலன்களை தருவார். 12ஆம் வீட்டில் குரு அமர்ந்து சுபரான புதன், சுக்கிரன் பார்வை பெற்றால் நிம்மதியான இல்லற வாழ்க்கை அமையும். சுப செலவுகள் அமையும். கண் பார்வை பிரச்சினைகள் தீரும். உங்களுடைய ஜாதகத்தில் குரு பகவான் எப்படி இருக்கிறார் என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரங்கள் செய்யுங்கள். குரு பகவானை வணங்குங்கள் சுபிட்சங்கள் தேடி வரும்.












Click it and Unblock the Notifications