ஜூன் ராசி பலன்: விருச்சிகம் ராசிக்கு பண வரவு உண்டு.. ஆனால் சிக்கலும் இருக்கு
ஜூன் மாத ராசி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜூன் மாதத்தை பொறுத்தவரை 29 ஆம் தேதி மேஷத்தில் உள்ள சுக்கிர பகவான் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். ஆனி 15 ஆம் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே குரு மற்றும் புதன் பகவான்கள் உள்ளனர். புதன் பகவான் 22 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் உள்ளனர்.

ஜூன் 7 ஆம் தேதி ஏகாதசி, 8, 23 தேதிகளில் பிரதோஷம் வருகிறது. 25 ஆம் தேதி அமாவாசை உள்ளது. மேலும் பஞ்சாங்கப்படி இந்த மாதத்தில் ஆந்திராவிலே புயல் மழை, நம் எல்லையில் பதற்றம் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் விருச்சிக ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் உலகத்தின் பார்வையில் பிடிவாதக்காரர்களாக தெரிந்தாலும், உண்மையில் அவர்கள் மனதளவில் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். உத்யோகம், தொழிலில் மிகவும் ஆளுமைத்திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு அதிகளவு உதவி செய்து, அதற்காகவே அதிக விமர்சனங்களை எதிர்கொள்வார்கள்.
சுப காரியம்
குரு பகவான் எட்டாம் இடமான மறைவு ஸ்தானத்துக்கு வந்துள்ளார். அவர் அங்கிருந்து தன ஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவு நன்றாகவே இருக்கும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். ராகு நான்காம் இடத்தில் இருப்பதால் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு உண்டாகும்.
கலைத்துறை
ஆசிரியர்களை மட்டும் பகைத்துக் கொள்ளாவிடின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். தகவல் தொடர்பு சம்மந்தப்பட்ட கல்வியில் இருப்போருக்கு சிறப்பாக இருக்கும். கலை, சினிமா, ஊடகம் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்போருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு, அரசியல் துறை தொடர்புடையவர்களுக்கு முதல் 15 நாட்கள் நன்றாக இருக்கும்.
அங்கீகாரம்
இந்த காலம் மகளிருக்கு சிறப்பாக இருக்கும். வேலை வாய்ப்பு தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் ஆதரவு இருக்கும். வாழ்க்கை துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். கால்நடைகள், செல்ல பிராணிகள் வளர்ப்பால் ஆதாயம் உண்டு.
கவனம்
பணம் கையாள்வதில் கவனம் தேவை. எதிலும் ரகசியம் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் பணம் விரயமாக வாய்ப்புள்ளது. நகைகள் திருட்டு போவதற்கும் வாய்ப்புள்ளது. அதிலும் அதிக கவனம் தேவை. பங்குச்சந்தை, ஆன்லைன் முதலீடு ஆகியவற்றில் எச்சரிக்கை வேண்டும். இல்லையென்றால் மோசடியில் சிக்க வாய்ப்புள்ளது. பணத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
பரிகாரம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள், அரசியல் துறையினர் கடைசி 15 நாட்கள் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனம் ஓட்டும்போது அதிக எச்சரிக்கை அவசியம். குல தெய்வ வழிபாடு சிறப்பான பலன்களை கொடுக்கும். சனி பகவான் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் காவல் தெய்வங்களை வழிபடுவதும் அற்புதமான பலன்களை தரும்.












Click it and Unblock the Notifications