சித்திரை திருவிழா..கள்ளழகரை காண எத்தனை லட்சம் பேர் வந்தாலும் சமாளிப்போம்.. சொல்கிறார் சேகர்பாபு
மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்விற்கு 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சித்திரை திருவிழாவை எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் எத்தனை லட்சக்கணக்கான மக்கள் வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மீனாட்சி பட்டாபிஷேகம் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 1ஆம் திக் விஜயம், 2ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மே 3ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். 4ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவையும், விழாவின் முக்கிய நிகழ்வாக மே மாதம் 5ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

சித்திரை திருவிழாவை காண தென் மாவட்ட மக்கள் அனைவரும் மதுரைக்கு வருவார்கள். மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மீனாட்சி அம்மன் கோவிலிலும், அழகர் ஆற்றில் இறங்கும் இடத்திலும் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் சேகர்பாபு ஆய்வு கூட்டம் நடத்தினார். அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், காவல் ஆணையாளர் நரேந்திரன் நாயர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "மதுரை கள்ளழகர், மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திக்விஜயம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்வில் போது அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருக்கல்யாண நிகழ்விற்கு 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். தேரோட்டம் செல்லும் பாதைகள் மற்றும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
போதிய அளவு மருத்துவ முகாம்களை அதிகரிப்பது, சிசிடிவி கேமிராக்கள் அமைப்பு, மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கைகள், விஐபிகளுக்கு இந்த முறை கார் பாஸ் வழங்கவுள்ளோம். வரலாற்றில் இல்லாத அளவிற்கு சீரோடும் சிறப்போடும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க பூங்காக்கள், கல்லூரி மற்றும் பொழுதுபோக்கு இடங்களை திறந்துவைக்க உத்தரவிட்டுள்ளோம். சித்திரை திருவிழாவுக்கு எத்தனை லட்சக்கணக்கான மக்கள் வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது என்று கூறினார். சித்திரை திருவிழாவில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் எளிதாக வழிபாடு செய்ய போக்குவரத்து நெரிசல் இல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வைகை ஆற்றை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. வைகை ஆற்றில் போதுமான அளவு தண்ணீர் திறந்து விட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த கால தவறுகள் நடைபெறாத வண்ணம் பல்வேறு சீர்திருந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சித்திரை திருவிழா இந்தாண்டு மிகச்சிறப்பாக நடக்கும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.












Click it and Unblock the Notifications