மாசி மகம் 2021 : திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு
மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். தெப்ப உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சிவகங்கை: மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. தெப்பக்குளத்தை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். சௌமியநாராயணரிடம் வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திர பாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம்.
திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. மந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்கு தான். உலகமக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமையும் இந்த ஆலயத்திற்கு உண்டு.
இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத பௌர்ணமி நாளில் தெப்ப உற்சவம் விழா சிறப்பாக நடைபெறும். இந்த தெப்ப உற்சவத்திற்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அருகில் உள்ள பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இதில் முக்கிய நிகழ்வாக கோயில் உட்பிரகாரத்திலும், தெப்ப குளத்தை சுற்றிலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
தெப்பத்தை சுற்றிலும் தீபம் ஏற்றுவது ஏன் என்பது பற்றி புராண கதையும் உள்ளது. கதம்ப மகரிஷி இப்பகுதியில் தவம் செய்த போது தன்னுடைய தவத்திற்கு மனிதர்களாலும், மிருகங்களாலும், அரக்கர்களாலும் எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொண்டார்.
இரணியாசுரன் என்ற அசுரன், முனிவர்கள் மற்றும் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை வதம் செய்வது குறித்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், மற்றும் தேவர்கள் இங்கு ஆலோசனை செய்ததாகவும் இதனாலேய இவ்வூருக்கு திருக்கோஷ்டியூர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சௌமியநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.
இப்பெருமானை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு.
மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. இதில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பு. மாசிமக தினத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
சௌமியநாராயணரிடம் வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திர பாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைக்கின்றனர்.
இந்தாண்டிற்கான தெப்பத்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ஆம் திருநாளான்று காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், பின்னர் பகல் 12.50 மணியளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெற்றது. இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அன்னவாகனத்தில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது.
10ம் திருநாளான சனிக்கிழமை காலையில் தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் 11.30 மணியளவில் பகல் தெப்பம் கண்டருளலும் நடைபெறும். இரவு இரவு 9 மணியளவில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியாருடன் மின் ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும்.
தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில தினங்களாக பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், தெப்ப குளத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.