மே மாத ராசி பலன் 2023: விடியல் வந்து விட்டது..நிம்மதியும் சந்தோஷமும் யாருக்கு கிடைக்கும்?
சென்னை: மே மாதத்தில் நவ கிரகங்களின் தலைவன் சூரியன் மேஷம், ரிஷபம் ராசிகளில் பயணம் செய்கிறார். நவ கிரகங்களின் பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. புதன் மேஷ ராசியில் குரு, ராகு உடன் பயணம் செய்கிறார். சுக்கிரன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி செவ்வாய் உடன் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு பிருகு மங்கள யோகம் கைகூடி வரப்போகிறது. மே மாதத்தில் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மே மாதம் 12ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். மே 15ஆம் சூரியன் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். மே மாத இறுதியில் சுக்கிரன் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கும்ப ராசியில் சனி, துலாம் ராசியில் கேது பயணம் செய்கிறார்.

துலாம்: மே மாதம் விடியல் வரப்போகிறது. நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். குரு பெயர்ச்சியால் உங்களுக்கு விடிவுகாலம் வந்து விட்டது. குருவின் பார்வை புதிய திருப்பத்தை ஏற்படுத்தப்போகிறது. ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ள குரு பகவான் தடைகளை உடைக்கப்போகிறார். ராசி அதிபதி சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் உடன் பயணம் செய்வதால் உயர் கல்வி யோகம் தேடி வரப்போகிறது. வெளிநாட்டு வேலை தேடி வரும். வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கவலைகள் நீங்கும்: திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கப்போகிறது. பெண்களுக்கு அற்புதமான கால கட்டம். யோகங்களால் பொன்நகைகளை சேரப்போகிறது. நட்பும் உறவுகளும் கூடி வரப்போகிறது. கஷ்டங்கள், கவலைகள் நீங்கப்போகிறது. பல தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டீர்கள். வீறு கொண்டு எழப்போகிறீர்கள். இனி சாதனைகளை செய்யப்போகிறீர்கள். வரப்போகும் நாட்கள் அதிர்ஷ்டகரமான நாட்கள் வெற்றிகளை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் அற்புதமான கிரக நிலைகள் உள்ளன. புதிய மாற்றங்கள் வரப்போகிறது. தன ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளார். வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் கைகூடி வரப்போகிறது. சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கப்போகிறது. செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்ததால் சில சங்கடங்களை சந்தித்து வந்தீர்கள். இனி கவலை வேண்டாம். செவ்வாய் பகவான் ஒன்பதாம் வீட்டில் கடக ராசிக்கு சென்று நீச்சமடையப்போகிறார். சில நாட்கள் அவர் நீச பங்கமாகியும் பயணம் செய்வார். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
பணம் பத்திரம்: திருமண சுப காரியங்கள் கைகூடி வரப்போகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வரப்போகிறது. நினைத்த பல்கலைக்கழங்களில் கிடைக்காவிட்டாலும் நல்ல கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நான்காம் வீட்டில் சனிபகவான் பயணம் செய்வதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நோய்கள் குணமடையும். சுக்கிரன் எட்டாம் வீட்டிற்கு செல்வதால் பணம் நகைகளை பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது. மனதாலும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று கந்த சஷ்டி கவசம் படித்து அர்ச்சனை செய்யுங்கள். குல தெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடைபெறும்.












Click it and Unblock the Notifications