திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்.. நடமாடும் உடைமாற்றும் அறை
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரக்கூடிய பெண் பக்தர்களின் வசதிக்காக சென்னை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் நடமாடும் கழிப்பறை மற்றும் உடை மாற்றும் வாகனம் உபயமாக வழங்கப்பட்டது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில். இந்த ஆலயம் கடலின் அருகில் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு அருகில் உள்ள நாழிக்கிணறில் புனித நீராடுவார்கள்.

குளித்து விட்டு உடை மாற்றவும் அவசரத்திற்கு இயற்கை உபாதைகளை கழிக்கவும் பெண்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தினசரியும் பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் வந்து செல்லும் இந்த ஆலயத்தில்
சரியான உடை மாற்றும் அறை இல்லை என்பது பக்தர்களின் குறையாக இருந்தது.
இந்த நிலையில் பெண் பக்தர்களின் குறைகளை போக்கும் வகையில் சென்னை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் நடமாடும் கழிப்பறை மற்றும் உடை மாற்றும் வாகனம் உபயமாக வழங்கப்பட்டது.
இந்த கழிப்பறை வாகனத்தில் இரு புறங்களிலும் 8 கழிப்பறைகள் மற்றும் 2 உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த கழிப்பறை வாகனம், பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு வெளியே வரக்கூடிய வடக்கு வாசல் எதிர்புறம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் கழிப்பறை வாகனத்தை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை கோவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள், கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் உபயமாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதியும் ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை கோவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள் நாகராஜன், சக்திவேல், கணேசன், அசோகன், சாய்சிவா, ராஜ்பிரகாஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நடமாடும் உடைமாற்றும் அறை, கழிப்பறை தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று கோவிலுக்கு வந்திருந்த பெண் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கழிப்பறையை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications