செவ்வாய் தோஷம் போக்கும் ஆடி கடைசி செவ்வாய் விரதம் : தம்பதியர் ஒற்றுமை, குழந்தைபேறு கிடைக்கும்
இன்று ஆடி மாத கடைசி செவ்வாய்கிழமை என்பதால் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு, மங்கல கெளரி விரதம் கடைப்பிடிப்பதால் விசேஷ பலன்கள் கைகூடும்.
சென்னை: திருமண தடை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம் நீங்க ஆடி கடைசி செவ்வாய் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது சிறப்பு. பெண்கள் மங்கல கௌரி விரதம் இருந்தால் விஷேச பலன்கள் கைகூடும்.
ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அவ்வையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமண தடை நீங்கவும், திருமணம் ஆனவர்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தினை கடைபிடிக்கின்றனர்.
திருமண தடை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம்
செவ்வாய் தோஷம் எனப்படும் அங்காரக தோஷம் கல்யாணத்திற்கு பெரும் தடையாக பேசப்படும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது.
லக்னம், சந்திரன், முதலியவைகளுக்கு 1,2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும். அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் தெசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது.1,2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.
செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் இருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களையே செவ்வாய் தோஷம் பெற்றவர்களாக கூறப்படுகிறது. ஆனால் தோஷம் இல்லாதவர்கள் காலப் போக்கில் தாம்பத்தியத்தில் இருந்து விலகுவர். தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதனால்தான் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் மற்றொரு தோஷமுள்ள ஜாதகத்தை தேடுகின்றனர். எனவே செவ்வாய் தோஷம் என்றாலே யாரும் பயந்து விட வேண்டாம். திருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது.
செவ்வாய்க்கு உரிய அதிதேவதையான முருகனை வழிபட வேண்டும். செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பது நல்லது. கோதுமை ரொட்டி, துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.
இன்று ஆடி செவ்வாயை முன்னிட்டு அவ்வையார் அம்மன் கோயிலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஆடி கடைசி செவ்வாயையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் வழிபட்டனர். திருமண தடை தோஷம் நீங்கவும் குழந்தை பேரு கிடைக்கவும் விதவிதமான கொழுக்கடைகளை கடவுளுக்குப் படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வையாருக்கு தனி கோயில் உண்டு. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி செய்வாய் கிழமைகளில் பெண்கள் ஒன்று கூடி பச்சரிசி, உள்ளிட்ட உணவு தானியங்களை கொண்டு வித விதமான கொழுக்கட்டைகளை தயார் செய்து பூசாரி இல்லாமல் அவ்வையார் அம்மனுக்கு தாங்களே படைத்து வழிபடுவது வழக்கம்.
ஆடி செவ்வாய்கிழமையான இன்று பெண்கள், குமரி மற்றும் கேரளப் பகுதிகளிலிருந்து வந்திருந்த பெண்கள் அவ்வையார் அம்மனுக்கு படையல் இட்டு நீண்ட வரிசையில் காத்து நின்று வழிபட்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற முப்பந்தல் இசக்கி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், கொட்டாரம் முத்தாரம்மன் கோயில், சந்தனமாரியம்மன் கோயில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன், வடசேரி காமாட்சி அம்மன் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.