சங்கரா... நாராயணா... விண்ணதிர முழக்கம் - தவக்கோலத்தில் காட்சி தந்த கோமதி அம்மன்
சங்கரன்கோவிலில் ஊசிமுனையில் ஒற்றைக்காலில் தவமிருந்த கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சியளித்த கோலத்தை மெய்சிலிர்க்க பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி: ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் சங்கரன் கோவில் உள்ள சங்கரநாராயணர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற ஆடித்தவசு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 25ஆம் தேதி நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11ஆம் திருநாளான நேற்று நடைபெற்றது.இதனை காண தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஆடித்தவசு
வெள்ளிக்கிழமையன்று காலை கோயிலின் மேற்கு பிரகாரம் யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் ஊசிமுனையில் ஒரு கையில் விபூதி பையுடன் தவக்கோலத்தில் எழுந்தருளி தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு சென்று தவமிருந்தார்.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
தொடர்ந்து 2.45 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி சப்பரத்தில் தெற்குரதவீதியில் உள்ள தவசு காட்சி கொடுக்கும் பந்தலுக்கு புறப்பட்டார்.
அப்போது விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்டவற்றை சப்பரத்தில் போட்டனர்.
பக்தர்கள் உற்சாக முழக்கம்
பின்னர் சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து மாலை 5.14 மணிக்கு சிவபெருமான், கோமதிஅம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. அப்போது பக்தர்கள், ‘சங்கரா, நாராயணா‘ என்று விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினர்.
அம்மனுக்கு காட்சி கொடுத்த இறைவன்
தொடர்ந்து இரவு 8 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் தவசு காட்சிக்கு புறப்பாடும், இரவு 9 மணிக்கு மேல் சிவபெருமான் கோமதிஅம்பாளுக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் வைபவமும் நடந்தது. இருவருக்கும் ஒரு சேரத் தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கமிட்டனர்.