ஆலயதரிசனம்: குன்னத்தூர் செங்கானி கோவில்- ராகு
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது நவகைலாயங்களில் நான்காவது கைலாயமான குன்னத்தூர் ராகு திருத்தலமாகும். ஜோதிடவியலில் தசா வரிசையில் ராகு ஆறாவது இடத்தைப் பெறுகிறது. ராகுவின் அருள் கிட்டினால் நமக்கு நன்மைகள் நடந்து கொண்டிருக்கும். குன்னத்தூர் என்ற இவ்வூர் செங்காணி எனவும் அழைக்கப்பட்டது. செங்காணி என்பது இவ்வூரில் உள்ள செம்மண் நிலத்தைக் குறிக்கிறது.

புராண வரலாறு:
குன்னத்தூர் அரசன் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள மரத்தில் ஒரு ஆண்டில் ஒரு பூ மட்டுமே பூத்து ஒரு காய் மட்டுமே காய்க்கும். அந்த பழத்தை அரசன் மட்டுமே உண்டு வந்தார். ஒரு முறை அந்த வழியாக தண்ணீர் எடுத்துக் கொண்டு சென்ற பெண்ணின் குடத்தில் பழம் விழுந்து விட்டது. இதையறியாத பெண் வீட்டிற்கு சென்றுவிட்டாள். மரத்தில் இருந்த பழத்தை காணாத அரசன் வீடு வீடாக காவலர்களை கொண்டு சோதனையிடச்செய்தான். அதற்குள் குடத்தில் இருந்த தண்ணீரை எடுக்கும் போது பழம் இருப்பதைக் கண்டு அரசனிடம் கொடுத்தாள். அரசன் அந்த பழத்தை பெண்தான் திருடியிருப்பாளோ எனக் கருதி அப்பெண்ணை கழுவிலேற்றினான். அந்த பெண் இறக்கும் தருவாயில் பெண்களும் பசுக்களும் தவிர இவ்வூர் அழியட்டும் என சாபம் இட்டதாகவும் ஒரு கருத்து உள்ளது. எனவே குன்னத்தூர் வளம் குன்றியது.
கல்வெட்டு சான்று:
இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகள் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்தவைகளாகும். கோயில் பூஜைகளை நடத்த வீரபாண்டிய மன்னன் நான்காயிரத்து இருநூறு பணம் கொடுத்துள்ளார் என்பது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயிலில் நில அளவுகோல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க இந்த நில அளவு கோல் பயன்படுத்தப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிச்சிறப்பு:
இத்திருக்கோயிலின் இறைவன் கோத பரமேஸ்வரர் ஆவார். இறைவி சிவகாமி அம்மன் ஆவார். கருவரையில் உள்ள இறைவன் நெஞ்சில் சர்ப்பம் உல்லது போல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயில் பிரகாரத்தில் பன்னிரெண்டு கரங்களோடு ஆறுமுக நயினார் அருள் பாலிக்கிறார். இந்த சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலையாகும். இச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னரே மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இத்திருக்கோயில் கோத பரமேஸ்வரரை வேண்டி ராகு பரிகாரம் செய்தால் தடைபடும் திருமணம் நடக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும் நற்புத்திரர்கள் கிடைப்பார்கள்.
காலசர்ப்ப தோஷம் நாக தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று வளம் பெறலாம்.
அமைவிடம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. மேல திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் உள்ளது












Click it and Unblock the Notifications