ஆண், பெண், திருநங்கை.... குழந்தையை தீர்மானிக்கும் கிரகங்கள் #Astrology
திருமணமான உடனேயே குழந்தை பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. தவமாய் தவமிருந்து பரிகாரம் செய்துதான் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
சென்னை: திருமணம் ஆன சில மாதங்களிலேயே ஏதாவது விஷேசமா என்று உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் தம்பதிகளிடம் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். வாழையடி வாழையாக வம்சம் தழைக்க உதவுவது குழந்தைகள்தான். புத்திர பாக்கியத்தை தீர்மானிக்கும் கிரகங்கள், புத்திர ஸ்தானம் பற்றியும் அறிந்து கொள்வோம்.
நாம் செய்த பூர்வ புண்ணியத்தின் பலனாகவே நமக்கு புத்திரர்கள் கிடைக்கிறார்கள் எனவேதான் ஜாதகத்தில் 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் குழந்தையை நிர்ணயிக்கும் ஸ்தானமாக உள்ளது. ஆண் குழந்தை, பெண் குழந்தை சிலருக்கு திருநங்கையாகவும் குழந்தைகள் பிறக்கின்றன. இதற்குக்காரணம் கிரகங்களின் சேர்க்கையும் பார்வையும்தான்.
ஜாதகத்தில் 5ஆம் பாவத்தில் இருக்கும் கிரகம் சுப பலம் பெற்று இருக்க வேண்டும். சுபராக இருப்பது நல்லது.
5ஆம் பாவத்திற்கு அதிபதி பலம் பெற்று இருக்கவேண்டும். 5ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்திற்கோ அல்லது 5ம் பாவத்திற்கோ 6,8,12ல் மறையக்கூடாது.
சூரியன் செவ்வாய் தொடர்பு
5ம் பாவம் என்பது புத்திர ஸ்தானம். 9ம் பாவம் என்பது கரு உற்பத்தி ஸ்தானம். 5ம் பாவத்துடனோ அல்லது 9ஆம் பாவத்துடனே உஷ்ண கிரகங்களான சூரியன் மற்றும் செவ்வாய் தொடர்பு கொண்டால் முதலில் கருச்சிதைவு உண்டாகும். 5ம் பாவத்துடன் சனி, கேது தொடர்பு பெற்றால் குழந்தை இறந்து பிறக்கும் அல்லது பிறந்த உடன் இறக்கும்.
எந்த குழந்தை பிறக்கும்
ஜாதகத்தில் புத்திரகாரகன் குரு பலம் பெற்று இருக்கவேண்டும். உயிரணுக்களுக்கு காரகரான சுக்கிரன் பலம் பெற்று இருக்க வேண்டும். 5ம் பாவத்தில் இருக்கும் கிரகம் நிற்கும் நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் என்றால் ஆண் குழந்தை பிறக்கும். 5ம் பாவத்தில் நிற்கும் கிரகம் பெண் நட்சத்திரத்தில் நின்றால் பெண் குழந்தை பிறக்கும். 5ம் பாவத்தில் கிரகமே இல்லாவிட்டால் 5ம் பாவத்திற்கு அதிபதி ஆண் நட்சத்திரத்தில் நின்றால் ஆண் குழந்தை 5ம் பாவத்திற்கு அதிபதி பெண் நட்சத்திரத்தில் நின்றால் பெண் குழந்தை பிறக்கும்.
புதன் சனி கேது
குழந்தையின் பாலினத்திற்கு அப்பா ஜாதகமும். குழந்தைகளின் எண்ணிக்கைக்கு அம்மாவின் ஜாதகம் நிர்ணயம் செய்யும். உபயராசிகளுடன் லக்கினம் 5ம் பாவம் மற்றும் அலி கிரகங்களான புதன், சனியும் ஞானகாரகன் கேது தொடர்பு பெற்றால் பிறக்கும் குழந்தை திருநங்கையாக பிறக்கும்.
சனி தொடர்பு தாமதம்
5ம் பாவம் மற்றும் 9ம் பாவத்துடன் மந்தன் சனி தொடர்பு கொண்டால் புத்திரபாக்கியம் தாமதமாகும்.
புத்திர ஸ்தானத்தில் இருக்கும் கிரகம் அல்லது புத்திர ஸ்தான அதிபதி அல்லது புத்திர ஸ்தானத்தை பார்க்கும் கிரகம் இவற்றின் தசாபுத்தியால் குழந்தை பிறக்கும். தசாநாதன் மற்றும் புத்திநாதன் கோச்சாரத்தில் புத்திர ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும் காலம் குழந்தை பிறக்கும்.
தத்தெடுக்கும் பாக்கியம்
பெற்றோரின் 1,5,9 ஸ்தானங்கள் புத்திரத்தின் 1,5,9 ஸ்தானங்களுடன் மிக கண்டிப்பாக தொடர்பு கொண்டிருக்கும்.
4ம் அதிபதி, 9ம் அதிபதி தந்தைக்காரகன் சூரியன், தாயார் காரகன் சந்திரன் இவர்கள் பலமிழந்தால் ஜாதகர் பிறரிடம் இருந்து குழந்தையை தத்து எடுத்து வளரும் நிலைக்குச் செல்வார்.
பரிகாரம் என்ன?
தஞ்சாவூர் அருகில் உள்ள திருகருகாவூருக்குச் சென்று, முல்லை வனநாதருடன் அருள் பாலிக்கும் கர்ப்பரட்சாம்பிகையை வழிபட்டால், அம்மன்அவர்களுக்குப் புத்திரபாக்கியத்தைத் தருவார். இங்கே கோயிலில் பிரசாதமாக எண்ணெய் வழங்கப்படுகிறது. இந்த எண்ணெயை கர்ப்பிணிப் பெண்கள் தங்களின் அடிவயிற்றில் தடவி வந்தால் சுகபிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
நவநீத கிருஷ்ணன்
கிருஷ்ணனுக்கு உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் கருங்கல்லில் ஆன உஞ்சலில் நவநீத கிருஷ்ணனை பிரதிஷ்டை செய்து மாதம்தோறும் ஸ்ரீ கிருஷ்ண ஹோமம், நவநீத கிருஷ்ண ஹோமம், இராஜகேபாலா யாகம், சந்தான கோபால யாகம் போன்ற யாகங்கள் நடைபெற்று தம்பதிகள் கைகளினால் ஊஞ்சல் தாலாட்டு, வெண்ணெய் சாற்றுதல் போன்ற வைபவங்கள் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்று வருகிறது.நவநீத கிருஷ்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும்.