மதுரையில் சொக்கநாதர் பட்டாபிஷேகம் - வளையல் விற்று பெண்களின் சாபம் தீர்த்த இறைவன்
ஆணவத்தோடு இருந்தால் கடவுள் தலையில் தட்டிவைப்பான். சாபம் கொடுக்க வைத்து சாப விமோசனமும் தருவார் ஆண்டவர் என்பதை உணர்த்துவதுதான் இறைவனின் திருவிளையாடல் இதை உணர்த்துவதான் வளையல் வற்ற லீலை.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. ஆறாம் நாளான நேற்று பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர். இன்று சொக்கநாதர் பட்டாபிஷேகமும், வளையல் விற்ற லீலையும் நடைபெறுகிறது.
முன்னொரு காலத்தில் தாருகாவனத்தில் இருந்த முனிவர்களின் மனைவியர்கள் தங்களைப் போன்று அழகிலும், கற்பிலும் சிறந்த பெண்கள் வேறு எங்கும் இல்லை என்று கர்வம் கொண்டிருந்திருந்தனர்.
இறைவனான சிவபெருமான் அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணினார். எனவே அவர் பிட்சாடனார் வடிவம் கொண்டார். பிட்சாடனார் அழகில் மன்மதனைப் போல கையில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி தாருகாவனத்திற்குச் சென்றார்.
பிட்சாடனராகத் திரிந்த ஈசனின் அழகில் மனதைப் பறி கொடுத்த ரிஷிபத்தினிகள் தாபத்தால் வளையல்கள் கழலும் அளவிற்கு தங்களை வருத்திக்கொண்டு உடல் மெலிந்தனர். நடந்ததை அறிந்த ரிஷிகள் 'ஈசனிடம் காமமுற்ற நீங்கள் அனைவரும் மதுரையம்பதியில் பிறந்து ஈசன் கையினால் வளையல் போடப்படும்போது சாப விமோசனம் பெறுங்கள்' என்று சபித்தனர்.
சாபம் பெற்ற ரிஷி பத்தினிகள் மதுரையில் வணிகர் குலத்தில் பிறந்து வளர்ந்தனர். சொக்கநாதர் வளையல் வியாபாரியாக மாறி வளையலை அணிவித்தோடு அவ்வாறு வந்தது தான்தான் எனவும் உணர்த்தி அவர்களை ஆட்கொண்டார். இத்திருவிளையாடல் வளையல் விற்ற படலம் எனப் புகழப்படுகிறது. ஆணவத்தோடு இருந்தால் அதற்கான தண்டனையை பெற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

ஆசிரியருக்கு
ஆவணி மூலம் திருவிழாவின் ஆறாம் திருவிழாவான நேற்று பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை' அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர். குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற ஒரு வயது முதிர்ந்த வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவருடைய சீடர்களில் சித்தன் என்பவன் மிகவும் தீய குணங்கள் கொண்டவன். அவன் பயிற்சி முடித்து சென்று பிறகு அவனும் ஒரு பயிற்சி பள்ளியை அமைத்தான். பின்னர் அவன் தனக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியரிடம் பயின்ற மாணவர்களையெல்லாம் தன் பயிற்சி பள்ளிக்கு அழைத்துக் கொண்டான். அது மட்டுமில்லாமல் ஆசிரியரின் மனைவியிடமும் தவறாக நடக்க முயன்றான். இதனால் வேதனை அடைந்த ஆசிரியரின் மனைவி சோமசுந்தரரிடம் முறையிட்டாள்.

வெட்டிக்கொன்ற இறைவன்
இறைவனும் ஆசிரியர் வேடம் தாங்கி சென்று சித்தனை வாள் போருக்கு அழைத்தார். அங்கு ஆசிரியரின் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், அவரை கண்ட கண்களையும் காத்துக் கொள் என்று கூறி ஒவ்வொரு அங்கமாக வெட்டினார். இறுதியில் அவன் தலையையும் வெட்டிக் கொன்றார். இந்த செய்தினை அறிந்த குலோத்துங்க பாண்டியன் ஆசிரியருக்கு தக்க மரியாதைகள் செய்து கவுரவித்தார்.

மதுரையில் சொக்கநாதர் ஆட்சி
ஆவணி மூல திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. கோயிலில் உள்ள ஆறுகால் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தக்கார் கருமுத்து கண்ணன் மீனாட்சி அம்மனிடம் இருந்து செங்கோலை பெற்று இரண்டாம் பிரகாரம் வலம் வந்து மீண்டும் சுந்தரேஸ்வரரிடம் சமர்ப்பிக்கிறார். இன்று முதல் மதுரையில் சொக்கநாதர் ஆட்சி ஆரம்பிக்கிறது.

பிட்டுக்கு மண் சுமந்த படலம்
இனி நரிகளை பரிகளாக்கி பரிகளை நரிகளாக்கும் படலமும் வைகையில் வெள்ளம் வர வைத்து பிட்டுக்கு மண் சுமந்த லீலையும் நடைபெற உள்ளது. மறுநாள் சொக்கநாதர் விறகு விற்கும் லீலையும் நடைபெறும். 12ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழா தீர்த்தவாரி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications