புற்றுநோய் ஏற்படுத்தும் சனி, ராகு, கேது - என்ன பரிகாரம் செய்வது?
உலக புற்றுநோய் தினமான இன்று ஜோதிட ரீதியாக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணத்தை பார்க்கலாம்.
சென்னை: இன்று பிப்ரவரி 4, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் ஜோதிட ரீதியாக ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணத்தையும் அதற்கான பரிகாரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். மக்களுக்கு புற்று நோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லாததே, இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது. இந்த கட்டுரை யாரையும் அச்சுறுத்துவதற்காக இல்லை. ஜாதகத்தில் இந்த கிரக அமைப்பை பெற்றுள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளது.
ஜோதிட ரீதியாக காரணம்
ஒருவரின் அழகு, அறிவு ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி. அதற்கு அடுத்தபடியாக உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை லக்னாதிபதியும், சந்திரனும் காரணமாகிறார்கள். எனவே, ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் நோயின்றி மகிழ்ச்சியாக வாழ முடியும்.
ராகு - கேது
லக்னாதியும், சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் அவர்கள் எப்போதும் நோயாளிகளாகவே இருப்பர்.
நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.
ராகு சனி சேர்க்கை
ஒருவருக்கு ஆறாம் அதிபதியானவர் லக்னாதிபதி அல்லது சந்திரனுடன் சேர்ந்தாலோ அல்லது லக்னாதிபதி 6ஆம் இடத்தில் இருந்தாலோ அவருக்கு கொடிய நோய் ஏற்படும். ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் சூரியன்+செவ்வாய் உடன் ராகு அல்லது கேது அல்லது சனி சேர்ந்திருந்து, சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
லக்னாதிபதி மற்றும் சந்திரனுடன் ராகு, கேது சேர்ந்திருந்தால் உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. லக்னாதிபதியுடன் சனி+ராகு இருந்தாலும் நோயால் பாதிக்கப்படுவார்.
புற்றுநோய் பாதிப்பு
லக்னாதிபதியுடன் சனி+ராகு இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் அல்லது அவருக்கு மலட்டுத்தன்மை, ஆண்மையின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும். பெண்ணாக இருந்தால் கரு முட்டை உருவாகாத குறைபாடு இருக்கும்.
சந்திரன் கேது சேர்க்கை
லக்னாதிபதி+ சந்திரன் ஆகிய இரண்டும் ராகு அல்லது கேதுவுடன் சேர்க்கை பெற்று, செவ்வாயின் பார்வை பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு உறுதியாக புற்றுநோய் ஏற்படும் எனக் கூறலாம்.
வாய் புற்றுநோய்
ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனியுடன் ராகு இணைந்திருந்தால் அவர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவார். புகையிலை மெல்லுவார். இதன் மூலம் அவருக்கு வாய் புற்றுநோய், தொண்டை, நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது.
பூர்வ புண்ணியம்
ஒருவருக்கு நோய்கள் ஏற்படுவது அவரது பூர்வ புண்ணியத்தின்படியே ஏற்படுகிறது. புற்றுநோய்க்கு பாம்பு கிரகங்கள் காரணமாக இருக்கின்றன. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பட்டீஸ்வரர் ஆலயத்தில் தனி சந்நிதி கொண்டு அருள் பொழியும் துர்க்கையை தரிசித்தால் ராகு-கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும். இந்த துர்க்கை நவகிரகநாயகி என போற்றப்படுகிறாள்.
புற்றுநோய் நீங்கும்
மூலிகைகளால் யாகம் வாலாஜா பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள ஏக சரீர ராகு - கேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. தன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும் இந்த அன்னத்தை சாப்பிட்டால் உடல் செரிமானம் மற்றும் வயிறு, புற்றுநோய் தொடர்பான நோய்கள் நீங்கும் என நிறுவனர் டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் திருமுருகன்பூண்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் ஆலயங்களில் ராகு காலத்தில் வழிபட புற்றுநோய், செரிமான கோளாறுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.