சித்திரை மாத ராசி பலன் 2022: சூரிய பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும்
சித்திரை மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தினால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் உச்சமடைகிறார். சித்திரை மாதம் மேஷ மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுவதும் இந்த மாதத்தில்தான். அம்மன் ஆலயங்களில் தேரோட்டம் உற்சவங்கள் களைகட்டும். பல்வேறு சிறப்புக்கள் கொண்ட சித்திரை மாதத்தில் உச்சம் பெற்ற சூரியனாலும் ஆட்சி பெற்ற குருவினாலும் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷ ராசியில் உச்சம் பெற்ற சூரியன், புதன் ராகு... துலா ராசியில் கேது... மகரத்தில் சனி...கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன்... மீனத்தில் குரு என கிரகங்கள் பயணிக்கின்றன.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் புதன் 11 ஆம் தேதி ரிஷபத்திற்கும் சுக்கிரன் 14ஆம் தேதி மீனத்திற்கும் சனி 16 ஆம் தேதி கும்பத்திற்கும் இடம் பெயர்கிறார்கள்.மற்ற கிரகங்களில் எந்த வித மாற்றமும் இல்லை. நவகிரகங்களின் சஞ்சார மாற்றத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல் மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
சித்திரை மாத கிரக சஞ்சாரங்கள் உங்களின் சிக்கல் சிரமங்களை தீர்த்து வைக்கப் போகிறது. சூரியன் உச்ச கதியில் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார்.அரசாங்க அதிகாரிகள் அன்புக்கு பாத்திரமாக நடந்து கொள்ளுங்கள். தொழிலில் கவனம் செலுத்த இயலாத நிலை உருவாகும். சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெற்றோருக்குப் பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள்.செவ்வாய் சாதகமான இடத்தில் இருக்கிறார். நட்பு விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். ஆனால் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பார்.புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் செய்தொழில் சற்று மந்தமாக இருக்கும். உறவினர்களால் செலவு உண்டாகும். இந்த மாத மத்தியில் புதன் ரிஷப ராசிக்கு செல்கிறார். அதன்பின்னர் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.அரசாங்கத் துறையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். படிப்பில் மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். அஷ்டம குரு. கொடுத்த வாக்கை காப்பாற்ற கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் பொறுமை அவசியம். கோபம் அறவே ஆகாது. நெருக்கமான உறவுகளில் கூட பிரச்சனை உருவாகலாம். சுக்கிரன் ஏழாம் இடத்தில் இருக்கிறார். நல்லவர்களின் உறவுகளை பகைத்துக்கொள்ள வேண்டாம் வேண்டாம். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது. 14ஆம் தேதி மீனத்துக்கு செல்கிறார் சுக்கிரன். குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ண முயற்சி செய்வார். நீங்கள்தான் மிக சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டும். சனிபகவான் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். தொழிலில் முன்னேற்றத்தை கொடுப்பார். மற்ற கிரகங்களின் கெடுபலனை அண்ட விடாமல் செய்வார். சிலருக்கு மணவாழ்க்கை அமையும். மக்கள் செல்வம் கிடைக்கும். கேது 3ஆம் இடத்தில் பயணம் செய்வதால் சகோதரர்களுக்காக செலவு செய்வீர்கள். அது உங்களின் உறவைப் பலப்படுத்தும். அதே நேரத்தில் ஒன்பதாம் இடத்துக் ராகுவும் நல்ல பலன்களைத் தருவார். வெளியூர் பயணங்களில் வெற்றி கிடைக்கும். வேலை சம்பந்தப்பட்ட நல்ல தகவல் கிடைக்கும். இந்த வாரம் நன்மைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கன்னி
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
சித்திரை மாதத்தில் சுழலும் கிரகங்களின் பலன்களை சிறப்புடன் பெறப் போகிறீர்கள். சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். ஆயுளுக்கு பக்கபலமாக இருந்தாலும் குடும்பத்தில் குழப்பங்களை உண்டு பண்ண தவறமாட்டார். கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை மிக அவசியம். எதற்கெடுத்தாலும் ஏட்டிக்குப் போட்டியாக பேசக்கூடாது. அதனால் பிள்ளைகளின் உடல்நலம், மனநலம் பாதிக்கப்படும்.சந்திரனின் சஞ்சாரம் தொழில்துறையில் சரளமான போக்கை கொண்டுவரும். ஏற்றம் இறக்கம் இருந்தாலும் நஷ்டம் ஏற்படாது. ஆறாம் இடத்து செவ்வாய் உங்களுக்கு மிகவும் அனுசரணையாக இருக்கிறார். வியாபாரம் வெற்றி பெற பக்க துணையாக இருப்பார். நிலம் வாங்கி விற்க ஏற்ற காலம் இது. லோன் போட்டு புதிய வீடுகள் கட்டுவீர்கள். ஏற்கனவே இருந்த கடன்களை எல்லாம் அடைத்து மனநிம்மதியை ஏற்படுத்துவார். உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் புதன் அமர்ந்து இருக்கிறார். தாய் மாமன் வழியில் எந்த உதவியும் கிடைக்காது. நீங்கள்தான் அவர்களுக்காக கஷ்டப்பட வேண்டும்.பதினோராம் தேதி ரிஷபத்துக்கு மாறி ஒன்பதாமிடத்தில் அமர்கிறார். வியாபாரத்தில் வெற்றி பெற புதன் இப்போது பெரும் துணையாக இருப்பார். நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கல்வித்துறையில் வேலை செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். ஏழாம் வீட்டில் குரு அமர்ந்திருக்கிறார். இது அவருக்கு ஆட்சி வீடு. திருமணமாகாதவர்கள் கண்டிப்பாக திருமணத்தை நடத்தி வைப்பார். குழந்தைச் செல்வத்தைக் கொடுத்து வம்ச விருத்தியை ஏற்படுத்துவார். ஆறாம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் 14ஆம் தேதி ஏழாம் இடத்திற்கு செல்கிறார். திருமண பேச்சுவார்த்தைகள் தள்ளிப் போகும். ஆனால் இல்லறத்தில் இன்பத்தை ஏற்படுத்துவார். ஐந்தாம் இடத்தில் இருக்கும் சனி 16ஆம் தேதி 6ஆம் இடத்துக்கு செல்கிறார். அற்புதமான அமைப்பு.இரும்புத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான காலம். ராகுவும் கேதுவும் இல்லற வாழ்க்கைக்கு கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கிறார்கள் கவனம் தேவை.

துலாம்
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
சித்திரை மாத பலன்களை சிறப்பாக அனுபவிக்கப் போகிறீர்கள். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானாதிபதியான சூரியன் உச்சத்தில் பயணம் செய்கிறார். இந்த மாதத்தில் நீங்கள் செல்வச் செழிப்பில் திளைக்க போகிறீர்கள். எந்த தொழிலாக இருந்தாலும் கண்டிப்பாக ஏற்றம் பெறுவீர்கள். உணவு தொழில் உற்சாகமான லாபத்தைக் கொடுக்கும். செவ்வாய் ஐந்தாம் இடத்தில் நிற்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறப்பீர்கள். செங்கல் மணல் வியாபாரம் செல்வத்தை பெருக்கும். புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செல்வீர்கள். கணினி துறைகள் கடுமையாக வளர்ச்சி அடையும். புதன் ஏழாமிடத்தில் சூரியனோடு இணைந்திருக்கிறார். அரசுத்துறை வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அரசு வேலைக்கான தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெறுவார்கள். 11ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார் புதன். இங்கும் நல்லதுதான் செய்வார். வியாபாரம் நல்ல லாபத்தில் நடக்கும். குரு பகவான் ஆறாமிடத்தில் உச்ச சுக்கிரனுடன் உட்கார்ந்திருக்கிறார். எதிர்ப்புகளை முறியடிக்க வைப்பார். மறைமுக எதிரிகளை அழித்து தொழில்துறையில் ஏற்பட்ட போட்டியை துடைப்பார்.போட்டி பந்தயங்களில் வெற்றியை ஏற்படுத்திக் கொடுப்பார். சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார்.குடும்பத்தில் நிலவிய குழப்பங்களை போக்கி சந்தோசத்தை கொடுப்பார். மங்கல நிகழ்ச்சிகள் ஏற்பட வழி வகுப்பார். 14ஆம் தேதி மீனத்திற்கு சென்று உச்சமடைகிறார். போட்டி பந்தயங்களில் வெற்றி வாகை சூட வைப்பார். நாலாம் இடத்தில் இருக்கும் சனிபகவான் செல்வம் செல்வாக்கை அதிகரிப்பார். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். வீட்டை அழகுபடுத்த செலவு செய்வீர்கள். ஏழாம் இடத்து ராகுவும் ஒன்றாம் இடத்து கேதுவும் உங்களுக்கு பக்க துணையாக இருந்து மற்ற கிரகங்களின் பலன்கள் சிதறாமல் பார்த்துக் கொள்வார்கள்.

விருச்சிகம்
போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே... சித்திரை மாத பலன்களை சிந்தாமல் சிதறாமல் அனுபவிக்கப் போகிறீர்கள். ஆறாம் இடத்தில் அமர்ந்திருக்கும் உச்ச சூரியன் அற்புத பலன்களை தருவார். நீண்ட காலம் நிலுவையில் இருந்த வழக்குகள் வெற்றி பெறும்.நிலையில்லாமல் ஏற்றம் இறக்கமாக இருந்த தொழில்கள் நிலை பெற்று லாபம் அதிகரிக்கும்.அரசியல்வாதிகள் சிறப்பான பணிகளால் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வார்கள்.புதனுடைய சேர்க்கையும் புதிய முயற்சிகளுக்கு வெற்றியை கொடுக்கும். நான்காம் இடத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய் வாகன யோகத்தை கொடுப்பார். கார் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடிவரும். இட விற்பனை அமோகமாக நடக்கும். ஆறாம் இடத்தில் அமர்ந்திருக்கும் புதன் தடைகளைத் தாண்டி வெற்றி பெற வைப்பார். திரைப்படத் துறையில் இருப்பவர்கள் ஜொலிப்பார்கள். நான்காம் இடத்து சுக்கிரனும் அதற்கு உறுதுணையாக இருப்பார். சுக்கிரன் உச்சம் அடையும் காலத்தில் ஜவுளித் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஸ்டேஷனரி விற்பனை சிறப்பாக நடைபெறும். தனியார் துறையில் வேலை செய்பவர்கள் நல்ல சம்பளம் பெறுவார்கள். ஐந்தாம் இடத்தில் குரு மங்கள காரியங்களை நடத்தி வைப்பார். குழந்தைச் செல்வங்கள் இல்லாதவர்களின் குறை தீரும். 9ஆம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்க்கிறார். கனவில் காண்பவை எல்லாம் நனவில் நடக்கும். மூன்றாம் இடத்து சனி பகவான் இரும்பு தொழிலில் ஏற்றம் பெறச் செய்வார். தள்ளுவண்டி வியாபாரிகள் கூட நல்ல லாபம் அடைவார்கள். சனிப்பெயர்ச்சியும் சாதகமான பலன்களை தான் தரும். மற்ற கிரகங்கள் செய்யத் தவறுகின்ற பலன்களை ஆறாமிடத்தில் உள்ள ராகு செய்யும்.12ஆம் இடத்தில் கேது ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொள்ளச் செய்வார்.












Click it and Unblock the Notifications