தீபாவளி திருநாள்: எண்ணெய் தேய்த்து குளிக்க, புத்தாடை அணிய ஏற்ற நேரம் எது தெரியுமா?
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
இந்திய நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளித் திருநாள் ஆகும். நரகாசுரனை சத்யபாமா மூலமாக கிருஷ்ணர் கொல்வதாகவும் நரகாசுரன் இறக்கும் தருவாயில் தான் இறந்த நாள் அன்று மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி புத்தாடைகள் அணிந்து தன் இறப்பை கொண்டாட வேண்டுமென்று வரம் பெற்றதாகவும் ஐதீகம்.
10-11-2015 செவ்வாய் கிழமையன்று அதிகாலை 03-00 மணி முதல் 06-00 மணிக்குள் குளிக்க வேண்டும். காலை 08-00 மணி முதல் 09-00 மணிக்குள் சுக்கிரன் ஹோரையில் புத்தாடைகள் அணிந்து கிருஷ்ணரையும் லட்சுமியையும் வழிபட வேண்டும்.
தீபாவளித் திருநாள் என்பது பூமாதேவியின் அம்சமான சத்யபாமா தன் மகன் நரகாசுரனை கொன்ற தினமாக கொண்டாடப்படுகிறது. தன் மகனைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக பசுவையும் கன்றையும் சேர்த்து சத்யபாமா பூஜித்தாக வரலாறு. நாமும் அவ்வாறு பசுவையும் கன்றையும் பூஜித்தால் நம் குழந்தைகள் நற்குணம் கொண்டவர்களாக வளர்வார்கள்.
வட இந்தியாவில் ராம ராவண யுத்தம் முடிந்து ராமர் தசரத மன்னராக பட்டாபிஷேகம் செய்யும் நாள் என்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள வட நாட்டவர்கள் தங்கள் வணிக நிறுவனத்தில் புது கணக்கு துவங்கி லட்சுமி பூஜை செய்வதை நாம் காணலாம்.
5 நாள் பண்டிகை
தீபாவளி ஐந்து நாள் மகோத்சவமாக கொண்டாடப்படுகிறது, அதன் படி,
முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.
இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.
மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்
நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்
ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.
யமதீபம் : இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன் வீட்டிற்கு வெளியில் தெற்கு நோக்கி வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு தக்காவறு ஒரு நபருக்கு ஒரு தீபம் என்ற வகையில் தீபம் வைக்க வேண்டும். குடும்பத்திலுள்ள அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழும் சூழல் உருவாகும்.
தனத்திரயோதசி : இன்று திரயோதசி திதி இருக்கும் நேரத்தில் சுப ஹோரையில் தங்கம் மற்றும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்கி தீபாவளியன்று மாலையில் லட்சுமி குபேர பூஜை செய்வதால் பொன் பொருட்கள் மென் மேலும் சேர்க்கை உண்டாகும்.
நரக சதுர்த்தசி : இன்று தீபாவளி திருநாள் அதிகாலை 03-00 மணி முதல் காலை 06-00 மணிக்குள் எண்ணெய் ஸ்நானம் செய்து வீட்டில் தீபம் ஏற்றி வைத்து கிருஷ்ணரை வழிபட வேண்டும். லட்சுமி பூஜை செய்வதால் வருடம் முழுவதும் நம் வீட்டில் லட்சுமி தங்கியிருந்து அருள் பாலிப்பாள்.
அமாவாசை : இன்று பகல் 01-12 மணி முதல் 03-36 மணிக்குள் உள்ள காலத்தில் தில தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும்.
பிரதமை & கார்த்தீக ஸ்நானம் : இன்று முதல் கார்த்திகை மாத அமாவாசை வரை உள்ள முப்பது நாட்கள் புனித நதி ஸ்நானம் புண்ணிய தீர்த்த ஸ்நானம் சமுத்திர ஸ்நானம் செய்யவும் சகல விதமான தோஷ பரிகாரங்கள் செய்யவும் உகந்த காலமாகும். இந்த ஸ்நானம் சூரிய உதயத்திற்கு முன் செய்வது சிறப்பு.
யமத் துவிதியை : யமத் துவிதியை பகல் 03-00 மணிக்கு மேல் 06-00 மணிக்குள் துவிதியை உள்ள நாள் யமத் துவிதியை ஆகும். இன்று யமதர்மராஜன் தன் சகோதரி வீட்டிற்க்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாள் ஆகும்.
இன்று சகோதரன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்க்கு சென்று எள் இலை அல்லது வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு அசீர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும். மேலும் சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன் கூறுகிறார்.
நரக சதுர்த்தசி குளியல் நேரம்
10-11-2015 செவ்வாய் கிழமையன்று அதிகாலை 03-00 மணி முதல் 06-00 மணிக்குள் குளிக்க வேண்டும். நல்லெண்ணையை தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தடவி பதினைந்து நிமிடம் ஊர வைத்து கொதிக்கும் வென்னீரில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அரசம் பட்டை, புரசம் பட்டை, அத்திப் பட்டை, ஆலம் பட்டை, மாவிலிங்கப் பட்டை ஆகிய ஐந்து வகையான மூலிகைப் பட்டைகளை ஊர வைத்து தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும்.
காலை 08-00 மணி முதல் 09-00 மணிக்குள் சுக்கிரன் ஹோரையில் புத்தாடைகள் அணிந்து கிருஷ்ணரையும் லட்சுமியையும் வழிபட வேண்டும்.
வாசக நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!