குரு பெயர்ச்சி பலன் 2024: ரிஷபத்திற்கு ஜென்ம குரு.. 2024ல் வெளிநாடு வேலைக்கு செல்லப்போவது யார்
சென்னை: மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் 2024ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் தற்போது வக்ர நிலையில் மேஷ ராசியில் இருந்தாலும் 2024 ஜனவரி முதல் நேர்கதியில் பயணம் செய்வார். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவாக பயணம் செய்யப்போகும் குரு பகவான் என்னென்ன யோகங்களை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
ரிஷபம்: சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்ட ரிஷப ராசியில் கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன. விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் உங்கள் ராசியில் வந்து அமர்கிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். குரு பகவான் இடமாற்றத்தை தரப்போகிறார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் இடங்களின் மீது விழுகிறது.

வேலை தொழில்: ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் இடம் மாற்றம் ஊர் மாற்றம் ஏற்படும். சிலர் வீடு கட்டுவார்கள். இருக்கும் வீட்டில் மாடி கட்டுவார்கள். வங்கியில் கடன் வாங்கி தொழில் தொடங்குவார்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சியடையும். சித்திரை மாதத்திற்குப் பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவும் இல்லாவிட்டால் சிறைச்சாலை வரை செல்ல வேண்டியிருக்கும்.
குரு பார்வை: குரு பகவானின் பார்வை ரிஷபம் ராசியில் இருந்து கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. 5 ஆம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். பிள்ளைகளின் வாழ்க்கையில் சுப காரியங்கள் நடைபெறும். நல்ல வேலை கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தம்பதியரிடைய இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் கூடும்.
பதவிகள் தேடி வரும்: குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தின் மீது விழுவதால் வருமானம் அதிகரிக்கும். அதிகார பதவி, அரசு பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும் உதவியும் கிடைக்கும். தந்தை வழி பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். கௌரவ பதவிகள் கிடைக்கும். பணம் பலவழிகளில் இருந்தும் வரும் வங்கிக்கடனை அடைப்பீர்கள். குரு பகவான் உங்கள் ராசியில் கார்த்திகை, ரோகிணி, மிருகஷீடம் நட்சத்திரங்களில் பயணம் செய்யும் போது வருமானம் அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே சேமிக்க முடியும்.
வெளிநாடு பயணம்: ரிஷப ராசியில் பிறந்து ராகு திசை, குரு திசை நடப்பவர்களுக்கு வெளிநாடு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். ஜென்ம குரு சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் மாற்றத்தை தருவார். பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவைப்படும். வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க நன்மைகள் உண்டாகும்.












Click it and Unblock the Notifications